Ad Widget

நாளை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்படுகிறார் சம்பந்தன்?

இலங்கை நாடாளுமன்றத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி 8வது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் நாளை 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன.

இந்த நிலையில் அரசாங்கத்தில் இணையாத தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பே அதிகளவான 16 ஆசனங்களை கொண்ட கட்சியாக விளங்குகிறது. எனவே அதற்கே எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொண்டிருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இரா. சம்பந்தன் நாளை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படுவார். ஜெ.வி.பியும் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குமார வெல்கமவை எதிர்க் கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கையெழுத்துக் கோரிக்கை ஒன்றும் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் வெற்றிலை சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி) உறுப்பினர்கள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் அதில் ஒரு குழு தனியான கட்சியாக ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்று வாதிடப்படுகிறது.

சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டால் அது 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர்- குறிப்பாக 32 வருடங்களுக்கு பின்னர் தமிழர் ஒருவர் இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக நியமனம் பெறுவார்.

ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஜெ.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1983ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி வரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts