வட மாகாணத்தில் லங்கா பெற்றோல் சராசரி நாளாந்த பாவனையானது கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரையில் அதிகரித்த வண்ணமுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
92 ஒக்ரேய்ன் பெற்றோல் 2011ஆம் ஆண்டு நாளாந்தம் 70,122 லீற்றர் நுகரப்பட்டது. இது 2012ஆம் ஆண்டு 84,751 லீற்றராகவும் 2013ஆம் ஆண்டு 88,946 லீற்றராகவும், 2014ஆம் ஆண்டு 91,098 லீற்றராகவும் அதிகரித்து, 2015ஆம் ஆண்டு நாளாந்தம் 119,750 லீற்றர் நுகரும் அளவுக்கு உயர்வடைந்துள்ளது.
95 ஒக்ரேய்ன் பெற்றோலானது, 2011ஆம் ஆண்டு 940 லீற்றராகவும் 2012 ஆம் ஆண்டு 1,735 லீற்றராகவும், 2013ஆம் ஆண்டு 1,934 லீற்றராகவும், 2014 ஆம் ஆண்டு 2,133 லீற்றராகவும் இருந்து 2015ஆம் ஆண்டு 3,200 லீற்றராக அதிகரித்துச் சென்றுள்ளது என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தால் வரியில்லாமல் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அதிகரித்துள்ள தனிநபர் மோட்டார் கொள்வனவுகள் காரணமாக பெற்றோல் நுகர்வு 2015ஆம் ஆண்டு வேகமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.