நாம் சாதாரண சிங்கள மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கும், இராணுவ அடக்குமுறைகளுக்குமே எதிரானவர்கள் என வடமாகண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன எம்மை இனவாதிகள் என்று தூற்றியுள்ளார். ஆனால் நாம் தனிப்பட்ட முறையில் சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் அல்லர். நாம் சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கும், இராணுவ அடக்குமுறைகளுக்கும் எதிராகவே குரல் கொடுக்கின்றோம். பொதுவாக ஒரு சிலரை தவிர, அதவாது தவறாக வழிநடத்தப்படுபவர்களை தவிர ஏனைய சிங்கள மக்கள் அனைவருமே நல்லெண்ணத்துடனே காணப்படுகின்றனர்.
இனவாதம் எனும் கூண்டுக்குள் இருந்துக்கொண்டு எம்மை இனவாதிகள் என விமர்சிப்பதுதான் வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.