ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரவித்துவான் பாலமுருகன் நல்லூர் பெருந்திருவிழாவில் வாசிக்கமறுப்புத்தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வருடாவருடம் நடைபெறும் பெருந்திருவிழாவில் வழமையாக வாசிக்கும் ஏகபோக உரிமையானது வித்துவான் பத்மநாதன் மறைவின்பின் பாலமுருகன் குழுவினருக்கு கிடைத்திருந்தது
இந்நிலையில் புதிதாக இவ்வருடம் கேரளத்து பாரம்பரிய மேளவாத்தியக்குழுவினரும் இறக்குமதிசெய்யப்பட்டிருந்தனர். அவ்வாத்தியங்களின் இசை நாதஸ்வரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக குறைப்பட்டதன் விளைவாக இந்த வெளியேற்றம் நேற்று காலைத்திருவிழாவுடன் ஏற்பட்டதாக தெரியவருகிறது.கோயில் நிர்வாகத்தால் நாதஸ்வரத்திற்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என பாலமுருகன் குறைப்பட்டதாக பக்தர்கள் பேசிக்கொண்டனர்.
இந்நிலையில் சிறீதர் பிச்சையப்பாவின் மைந்தர்களின் நாதஸ்வர குழுவினர் நேற்று மாலை புதிதாக களமிறக்கப்பட்டனர்.நேற்றையதிருவிழாவில் நாதஸ்வரப்பிரியர்களின் முக்கிய பேச்சாக இந்த விடயம் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இசைக்கருவிகளிடையேயும் போட்டிகள் பிரிவினைகள் இருக்கின்றன போலும் எனவும் சிலர் பேசிக்கொண்டனர்.