Ad Widget

நாட்டில் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பம்! மகிந்த

மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனி அலகுகளாக்கவும், விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்கவும் தமிழர் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் ஏற்படுத்திக் கொடுத்த மாற்றமும், உருவாக்கிய ஜனநாயகமும் இன்று சீரழிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சி மாற்றம் நாட்டை பாதாளத்திற்குக் கொண்டு செல்லும் என்பது உண்மையாகி விட்டது.
நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் நாட்டை அபிவிருத்தியின் பக்கம் திருப்பி குறுகிய காலத்தினுள் சிறந்த நாடாக மாற்றினோம்.

வடக்கையும், தெற்கையும் ஒரே மாதிரி கையாண்டு மக்களை ஒன்றிணைத்தோம். அதேபோன்று நாட்டின் தேசிய பாதுகாப்பில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டோம். வடக்கில் காணப்பட்ட அச்சுறுத்தலான சூழல் மற்றும் பிரயோகிக்கப்பட்ட சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் நாம் அதிக கரிசனையாக இருந்தோம்.

இவ்வாறான நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் ஒரே நோக்கத்தில் நாட்டின் தேசிய பாது காப்பையும் இன ஒற்றுமையையும் கவனத்தில் கொள்ளாது, வெறுமனே அதிகார மாற்றத்தை மட்டும் ஏற்படுத்தியுள்ளனர்.

அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவித்து வருகின்றனர். புலிப்பயங்கரவாதமும், இஸ்லாமிய பயங்கரவாதமும் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.இந்த மாற்றத்தையா மக்கள் விரும்பினர் என்று கேட்கும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

எனவே தேசிய பாதுகாப்பு விடயத்தில் தற்போதைய அரசாங்கம் அதிககரிசனை எடுக்க வேண்டும். பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டின் மீதான அழுத்தங்களை குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Posts