நீண்டகாலமாக இலங்கையின் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான வெகுசன அமைப்பின் எற்பாட்டில் கவனீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று யாழ் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
நீண்டகாலமாக விசாரணைகளின்றி மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 14 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி இன்று ஒன்பதாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அவ்வாறான நிலையில் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உயிரை அடகுவைத்து உண்ணாவிரதமிருக்கும் உறவுகளின் உயிருக்கு விலைபேசாதே, நாட்டில் நல்லாட்சியா? அரசியில் கைதிகளின் விடுதலைக்கு அரசு கூறும் விலை தான் என்ன? எம் உயிர் தான் என்றால் எடுத்துக் கொள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது ஏழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டு நேற்று முன்தினம் கொழும்பு விசேட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தனது ஆதரவை அளித்திருந்தார்.