Ad Widget

நவாலி தேவாலய தாக்குதலின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

யாழ்ப்பாணம் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலின் 19 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் ஆலய பங்குத்தந்தை தலைமையில் மாலை 5.30 மணிக்கும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்தில் மாலை 5 மணிக்கும் நினைவு தின விசேட பூசைகள் நடைபெறவுள்ளன.

navali

1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் பலியாகினர்.

அன்று அதிகாலை வலிகாம பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல், விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்

இந்நிலையில் அன்று காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இக் குண்டு வீச்சு சம்பவத்தில் 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இடம்பெயர்ந்த இந்த மக்களுக்கு நேரடியாக சென்று சேவைகளை வழங்கி கொண்டிருந்த வலி. தென்மேற்கு பிரதேச இரு கிராம அலுவலர்களான செல்வி. ஹேமலதா செல்வராஜா, பி.கபிரியேல்பிள்ளை ஆகியோரும் இக் குண்டு வீச்சு சம்பவத்தில் பலியாகினர்.

Related Posts