நல்லூர் பிரதேச சபையினால் அண்மையில் வழங்கப்பட்ட சிற்றூழியர்களுக்கான நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறிஇ அப்பிரதேச சபையை முற்றுகையிட்டு சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்படி சிற்றூழியர்களுக்கான நியமனத்தின்போது உரிய கல்வித் தகைமையை பூர்த்தி செய்யாத 02 ஊழியர்கள் தவிர்க்கப்பட்டு, ஏனையவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மேற்படி 02 ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல வருடங்களாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வருகின்ற மேற்படி 02 ஊழியர்களினதும் கல்வித் தகைமையைக் கருத்திற்கொள்ளாது, சேவை அடிப்படையில் இவர்களுக்கு நியமனங்களை வழங்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
இப்போராட்டத்தினால் பிரதேச சபையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டதுடன், அங்கு கடமையாற்றும் உத்தியோகஸ்தர்கள் எவரும் அலுவலகத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.