Ad Widget

த.தே.கூ யாழ். உறுப்பினர் ராஜினாமா; சு.க.வில் இணைவு

Mureyappuதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் முடியப்பு றெமிடியஸ் தனது மாநகர சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துக்கொண்டுள்ளார்.

தான், தமிழ்தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தினை யாழ்.மாநகர சபை முதல்வரிடம் கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்.ஊடக மையத்தில், நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் தனது ராஜினாமா தொடர்பில் அறிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மாநகர சபைத் தேர்தலில் நான் தமிழ் தேசியக் கூட்டமைபின் கீழ் போட்டியிட்டு, அதிக வாக்குகளில் வெற்றிபெற்று மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

தொடர்ந்து வந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நானும் முரண்பட்டுக் கொண்டு வந்திருந்த நிலையிலும், நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாகவே தனித்தும் சுதந்திரமாகவும் செயற்பட்டேன்.

கடந்த இரண்டு வாரங்களாக நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் சேர்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் என்னை, அக்கட்சியினர் எதிர்வரும் வடமாகாணத் தேர்தலில் போட்டியிட வலியுறுத்துகின்றனர். அதற்கான நேர்முகத் தேர்விற்கும் நான் சென்று வந்துள்ளேன்.

நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதால் தமிழ் மக்களுக்கான பணிகளிலிருந்து விலகுவது என்று இல்லை, தொடர்ந்தும் தமிழ் மக்களின் நலனுக்காக மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எதிர்காலத்தில் குரல் கொடுக்கவுள்ளேன்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து நான் சுயமாகச் செயற்படுவேன், இங்கு ஏற்கெனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக இயங்குபவர்களுடன் இணைந்து செயற்படமாட்டேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முடியப்பு றெமிடியஸ் மீது எதிர்வரும் 4ம் திகதி த.தே.கூட்டமைப்பினர் உள்ளக விசாரணை ஒன்றுக்கு ஏற்பாடுசெய்திருகையில் இவர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts