Ad Widget

த.தே.கூட்டமைப்பு ஒரு கட்சியாக பதிவுசெய்யப்படவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதியப்பட வேண்டுமெனவும், அதுவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன்

tana-suresh

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கோப்பாய் தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளைக்குழுவை தெரிவு செய்யும் நிகழ்வு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீர்வேலி பணிமனையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் ‘நீங்கள் கூட்டமைப்பு சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் நீங்கள் எந்த கட்சிகள் சார்ந்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது. கூட்டமைப்பென்பது நான்கைந்து கட்சிகள் சேர்ந்த கூட்டு. நீங்கள் நீதிபதியாக இருந்தவர் நடுநிலை தவறாது எல்லோரையும் இணைத்து செயற்பட வேண்டுமென’ வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடமாகாண சபை முதலமைச்சரிடம் கேட்டிருந்தார் அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ‘தான் ஆயுதம் தரித்திருந்த அமைப்புகளுடன் சேர்ந்து வேலை செய்ய முடியாதென’ தெரிவித்திருந்தார்.

அதற்கு நான் சொன்ன பதில் ‘உங்களை வேட்பாளராக நியமிக்க முன்னர் நாங்கள் அனைவரும் உங்கள் வீட்டுக்கு வந்தோம். நீங்கள் சொன்னீர்கள் கூட்டமைப்பில் உள்ள எல்லோரும் ஏற்றுக்கொண்டால் தான் வருவீர்களென்று. இதை நீங்கள் அப்போது சொல்லியிருக்க வேண்டும். ஆகவே இப்போது நீங்கள் அப்படி பேசுவது பிழையான விசயம்’ என்றேன்.

‘அது மாத்திமல்லாமல் நீங்கள் தேர்தல் காலத்தில் பிரபாகரன் போராட்ட வீரன் என்றெல்லாம் சொன்னீர்கள். இப்ப இப்படி கதைப்பது தவறு. பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தங்கள் உயிரைத்தியாகம் செய்ததை முக்கியத்துவப்படுத்தாவிட்டாலும் கொச்சைப்படுத்தக்கூடாது’. இவை தான் நான் அவருக்கு சொன்ன பதில். கூட்டமைப்புக்குள் உள்ள தமிழரசுக் கட்சி தவிர ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் ஒரு காலக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடின.

1987ஆம் ஆண்டு இவர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தில் தங்கள் கட்சிகளை பதிவு செய்தனர். இன்றைக்கு 25 வருடங்களுக்கு மேலாக ஒரு ஜனநாயகபூர்வமான கட்சிகளாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.

நான் இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக இருக்கின்றேன். 15 வருடங்களாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றேன். இப்போது எங்களை ஆயுத குழுவென்று சொல்வது எந்த வகையில் நியாயம்.

25 வருடங்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கையளித்து விட்டோம். நீங்கள் இப்போது இவ்வாறு சொல்வது நியாயமற்றது என்பதுடன் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் இருக்கின்றது.

இங்கிலாந்தில் வழங்கிய ஒரு செவ்வியில் கூட்டமைப்பு பதியப்பட தேவையில்லையென மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நாங்கள் எங்கள் கட்சிக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கூட்டமைப்பை ஒரு கட்சியாக வைத்திருக்கவேண்டும் என்பதையே விரும்புகின்றோம். இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டியவர்கள் பொது மக்களாகவே இருக்கின்றார்கள்.

இது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ எடுக்கின்ற விடயமல்ல. தந்தை செல்வா காலத்தில் தொடக்கி வைக்கப்பட்ட தமிழரின் உரிமை போராட்டம் என்பது இன்னும் முடியவில்லை. இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பே உள்ளது.

மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருக்கின்றது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் உதயகுமார் தவிசாளராக இருந்தார். அவர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எதிர்கட்சியான ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுடன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து பல்வேறுபட்ட பிரச்சினைகளை உருவாக்கினர். அவர் மீதான எந்த குற்றச்சாட்டுக்களும் இதுவரை நிரூப்பிக்கடவில்லை.

பின்னர் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு க.துரைசிங்கத்தைத் தவிசாளராக தெரிவு செய்தோம் அவருக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி கூட்டத்தை கூட்ட விடுகின்றார்கள் இல்லை. இன்று இந்த நிலைமைதான் காணப்படுகின்றது.

இவ்வாறு குழப்பம் விளைவிப்பவர்கள் மீது எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாத சூழலே காணப்படுகின்றது. ஆனால் இவ்வாறு குழப்பம் விளைவிப்பவர்கள் அனைவரையும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகவே பார்க்கின்றனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆயுட்காலம் முடிவுறும் காலம் நெருங்கிவிட்டது. இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கான முறையில் கட்டமைக்கப்பட்டு தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யவேண்டும். – என்றார்.

இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் கிளைக்குழு தெரிவு செய்யப்பட்டது, இதில் தலைவராக கணபதிபிள்ளை துரைசிங்கமும், செயலாளராக நவரட்ணம் காண்டீபனும், பொருளாளராக கு.சோதிலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர்.

Related Posts