Ad Widget

த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் 25 இல் கொழும்பில் நடக்கும்! சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே 25 ஆம் திகதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பல மாதங்களாகக் கூட்டப்படவில்லை. இதனை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையில், நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின்போதும் இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது.

“இதன்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி கூட்டுவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

Related Posts