புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பூநகரியைச் சேர்ந்த நடராஜா கலியுகராஜா (வயது 54) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த மாதம் 24ஆம் திகதி திடீர் காய்ச்சல் காரணமாக பூநகரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். தொடர்ந்தும் காய்ச்சல் தீவிரமடைந்ததால் அவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் 7ஆம் திகதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசியவாயம் பிறேம்குமார் மரண விசாரணையை மேற்கொண்டார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் திடீர் மரணங்கள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இவரது மரணம் இடம்பெற்றிருக்கின்றமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.