வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவம் புத்த விகாரை கட்டுவதை சட்டரீதியில் தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும் அரசியல்வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வலி.வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய புத்த விகாரை ஒன்றினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக வலி.வடக்கு பிரதேச சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடுகள் வழங்கப்பட்டும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் குறித்த விகாரையினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவம் மிக மும்முரமாக செயற்பட்டு வருகின்றதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை சட்ட ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இவ்வாறான நடவடிக்கை எடுக்க அரசியல்வாதிகளும் சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும் முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.