Ad Widget

தேவைக்கு அதிகமாகவும் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா

தேவைக்கு அதிகமாகவும் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் வடக்கு கிழக்கில் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

chunnakam

சுன்னாகத்தில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற கண்ணகி மற்றும் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உங்களது சொந்த இடங்களில் நீங்கள் மீளக்குடியமர வேண்டும் என்பதில் எவ்வளவு விருப்பத்துடன் இருக்கின்றீர்களோ? அதேபோன்றுதான் உங்களை உங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற அக்கறை எனக்கும் உள்ளது.

இதனடிப்படையில், கடந்த காலத்தில் எமக்குக் கிடைத்த குறைந்த அரசியல் பலத்தைக் கொண்டும் அரசுடனான இணக்க அரசியலின் ஊடாகவும் குடாநாட்டில் படைத்தரப்பினர் வசமிருந்த 17 ஆயிரத்து 522 ஏக்கர் நிலப்பரப்பை விடுவித்து அங்கு மக்களை மீளக்குடியேற்றியுள்ளோம்.

இது, மக்களிடம் நாம் வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்திக் காட்டியுள்ளதன் வெளிப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், குடாநாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையே காணப்படுகின்றது. இதேவகையில் தான், இங்குள்ள இரு நலன்புரி முகாம்களைச் சேர்ந்த மக்களும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலை இருந்து வருகிறது.

இங்குள்ள மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்ற இடர்பாடுகளையும் துயரங்களையும் நான் நன்கு அறிவேன். அந்த வகையில்தான், இந்நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு உடனடியாகவே சேதமடைந்துள்ள குடியிருப்புகளின் கூரைகளைப் புனரமைப்பது, சுத்தமான குடிநீர் வசதியைப் பெற்றுக் கொடுப்பது, மலசலகூடங்களின் வசதிகளை மேலும் பெற்றுக் கொடுப்பது, மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது என்பனவற்றுடன் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படும் வரையிலும் அல்லது தற்போதிருக்கின்ற காணிகளைக் கொள்வனவு செய்து அவற்றை குடியிருக்கும் மக்களுக்கு உரித்தாக்குவது வரையில், அந்த மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படுமென கூறியதோடு, தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதைப் போல், நாளாந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே எமது அரசியல் முயற்சியாக இருந்து வந்துள்ளது என்றும் கூறினார்.

இதனிடையே இக்குடியிருப்புகளில் வாழும் மக்களது சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட விடயங்களிலும் குறிப்பாக, சுயதொழில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் நாம் மிகுந்த அவதானம் செலுத்தி வருகின்றோம்.

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என்ற எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்றும் சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள், தேவைக்கு அதிகமாகவும் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் படையினர் நிலை கொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதே எமது நிலைப்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒருமித்த வாக்குப் பலத்தை வழங்கி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரை வெற்றிபெறச் செய்வதன் ஊடாகவே நாம் எமது சொந்த இடங்களுக்குச் சென்று மீளக்குடியமர முடியும் என்றும் கூற்றுடன் வீணையின் வெற்றி நிச்சயம் விடியலைத் தரும் என்றும் தெரிவித்தார்கள்.

இச்சந்திப்பின் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் இராமநாதன் ஐங்கரனும் உடனிருந்தார்.

Related Posts