Ad Widget

தேர்தலில் நான் யாரையும் ஆதரிக்க மாட்டேன் – ரவிகரன்

தமிழ் மண்ணிலிருந்து தமிழர்களின் உரிமைகளுக்காக நியாயமாக குரல் கொடுப்பவர்களைத் தவிர வேறு எவரையும் ஆதரிக்க மாட்டேன் என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

ravikaran -np

ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எங்கள் மண்ணில் வரலாறு அதற்கு முன் கண்டிராத சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட யாழ் மக்களின் இடப்பெயர்வை எங்களுக்கு பரிசளித்தவர் சந்திரிக்கா.

செம்மணிப்புதைகுழி உள்ளிட்ட பல பேரவலங்களை இவரது ஆட்சியில் தான் தமிழர்களாகிய நாம் முகம்கொடுத்தோம். தமிழர்களுக்கெதிரான போரில் 75% வெற்றி தன்னுடையது என்று அவரே உரிமை கோருகிறார்.

அத்துடன் எங்கள் மக்கள் மீதான இன அழிப்பின் குறியீடாக நிற்கிற கொடூரமான முள்ளிவாய்க்கால் பேரவலத்தை எமக்கு வழங்கியது மகிந்த ஆட்சியே.

இன்றும் இந்த அவலத்திலிருந்து மீண்டு எழாத நிலையில், உடலில் குண்டுச் சிதறல்களோடும் உளச்சிதைவுகளோடும் நடைப்பிணங்களாக எங்கள் மக்கள் வாழ்கின்றனர்.

இந்தப்போரின் தளபதியாக முன் நின்று உழைத்து அழிவுகளையும் அவலங்களையும் தமிழர் குடிக்கு வழங்கியவர் சரத் பொன்சேகா.

முள்ளிவாய்க்காலில் எங்கள் இனம் அழிக்கப்பட்ட போது கொழும்பில் பால்சோறு அரசியலையும் பட்டாசு அரசியலையும் பங்கு போட்டவரே மைத்திரிபால சிறிசேன.

இவர்கள் எவரையும் ஆதரித்து என்னால் பிரச்சாரம் செய்ய இயலாது. மரணித்த எங்களின் உறவுகளின் உணர்வுகளினை மிதித்து இவர்களுக்காக வாக்குக் கேட்கவோ வாழ்த்துப்பா பாடவோ முடியாது.

தமிழ் மண்ணில் இருந்து தமிழர்களின் உரிமைகளுக்காக நியாயமாக குரல் கொடுப்பவர்களைத் தவிர வேறு எவரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வதில்லை என்பது தனது கொள்கை சார் முடிவு

எங்கள் தாயகம் கடந்த காலங்களில் கண்ட அனைத்து வலி சுமந்த நிகழ்வுகளிலும் நேரடி பங்காளர்களாக திகழ்ந்த எமது மக்கள் இந்த தேர்தலில் சரியான முடிவை எடுக்கவல்ல அரசியல் அறிவுள்ளவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அதேவேளை, தமிழர்கள் தன் பின்னால் நிற்கிறார்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு மகிந்த அரசு முனைகின்றது.

தமிழ் மக்கள் இந்த தேர்தலில் எடுக்கக் கூடிய முடிவுக்கு முரணான முடிவை வாக்கு மோசடி மூலம் வெளிப்படுத்த முயற்சிப்பதையும் அனுமதிக்க முடியாது.

எனவே தேர்தலின் போது இது குறித்து கண்காணிக்கிற பணியை ஆற்றுவேன்

எங்களுக்கான தீர்வு, ஒருங்கிணைந்த மக்கள் சக்தியின் அரசியல் போராட்டத்திலேயே தங்கியுள்ளது. தேர்தலில் யார் வென்றாலும் எங்களின் தீர்வுக்கு எங்களின் உரிமைக்குரலே அவசியம்.

தேர்தல் முடிவில் தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ் மண்ணில் தமிழ் மக்கள் விரும்பும் நிரந்தரத் தீர்வை நோக்கிய எனது உரிமைக்குரல் சத்தியத்தின் வழியில் என்றும் தொடரும். என்றார்

Related Posts