தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலைமை தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் பாதகமான நிலையை தோற்றுவிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அரசியல் நகர்வுகளை கூட்டமைப்பு நிதானமாக அவதானித்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுபினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய நிலையில் தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படுமாயின், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு நோக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பயணத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், சர்வதேச நாடுகள் பலவும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் தொடர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு இடையே உருவாகியுள்ள கருத்து வேற்றுமைகளை சமரசம் செய்து கொண்டு தொடர்நதும் நல்லாட்சியை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.