Ad Widget

துப்பாக்கி சகிதம் வெள்ளை வேனில் பயணித்த 3 இராணுவ வீரர்கள் கைது

மேஜர் ஜெனரல் ஒருவரின் பாதுகாப்புப் பிரிவில் உள்ளவர்கள் எனக் கூறப்படும் இராணுவ வீரர்கள் மூவர் மிரிஹான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான பகுதியில் பயணித்த வேன் ஒன்றில் சந்தேகத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாணைகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 07.30 அளவில் குறித்த வேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வேனில் இருந்தவர்கள் சிவில் உடை தரித்த இராணுவ வீரர்கள் எனவும் இவர்கள் வசமிருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் அத தெரணவிடம் சுட்டிக்காட்டினார்.

மேலும் சந்தேகநபர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தியபோது, அவர்கள் மேஜர் ஜெனரல் ஒருவரின் பிரத்தியேக பாதுகாவலர்களாக செயற்பட்டு வந்ததாக கூறியுள்ளனர்.

எது எவ்வாறு இருப்பினும் சம்பவத்துடன் தொடர்புடைய வேன் மற்றும் அதன் இலக்கத் தகடு என்பன இராணுவத்தினருக்கு சொந்தமானதா என்பதை ஆராய்ந்து தெரியப்படுத்துமாறு, இராணுவப் பொலிஸாருக்கு, பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Related Posts