Ad Widget

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

08 வயது சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றினால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகள் முடிவடையவில்லை எனவும் , அதற்கு தமக்கு மேலதிகமாக 10 நாட்கள் தேவை எனவும் மன்றில் தெரிவித்தனர்.

துண்டிக்கப்பட்ட கையின் பாகத்தை பொலிஸார் ஊடாக கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு, அது தொடர்பிலான அறிக்கையை பெறவும் மன்று உத்தரவிட்டது.

அத்தோடு மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 23ஆம் திகதி எடுத்துக்கொள்வதாக யாழ்.நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் இடது கை தாதியின் கவன குறைவை அடுத்து மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம், சுகாதார அமைச்சு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

சிறுமியின் பெற்றோரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Related Posts