Ad Widget

துணுக்காய், அக்காயராயன் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பேரூந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரல்

முல்லைத்தீவு – துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பஸ் சேவைகள் நடைபெற்றன.

இந்தநிலையில் அக்கராயனில் துணுக்காய் பஸ் தரிக்கக் கூடாது என கிளிநொச்சி தனியார் பஸ் சங்கத்தினர் அறிவித்த நிலையில் மேற்படி வழித்தடத்தில் நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக இடம்பெறவில்லை.

இதுதொடர்பாக, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு மேற்படி கிராமங்களின் பொது அமைப்புகள் மனுக்கள் கையளித்த போதிலும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட போதிலும் மேற்படி கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து இடம் பெறவேயில்லை.

வடமாகாண பிரதி அவைத் தலைவர் கூட வடமாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியும் பயனில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

துணுக்காயில் இருந்து அக்கராயன் வழியாக யாழ்ப்பாணத்திற்கான பஸ் சேவைகளை நடாத்துவதற்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts