Ad Widget

திலீபன் என்கிற புனிதமான பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்றவர் டக்ளஸ் – சுகாஷ்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திலீபன் என்கிற புனிதமான பெயரைக் கூட உச்சரிக்கத் தகுதியற்ற நபராவார். அப்படியானவர் தியாக தீபம் திலீபனைப் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்து எனக்கு ஒரு வாசகத்தை ஞாபகப்படுத்துகிறது. “சாத்தான்கள் வேதம் ஓதக்கூடாது”.

இவ்வாறு சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் “அரசியலுக்காக திலீபனை எல்லாம் தியாகிகள் ஆக்கிக் கொள்ள நினைக்கின்றார்கள். திலீபன் ஏன் கொல்லப்பட்டான். அவனது சுயரூபம் என்ன, எத்தனை பேரை அவன் கொன்றான் என்பதெல்லாம் தெரியாது பேசக்கூடாது. சகோதர படுகொலைகளில் ஈடுபட்டவன், இலங்கை அரசு கொன்று குவித்ததை விடவும் இவர்கள் செய்த கொலைகள் ஏராளம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது அந்தக் கருத்தை வன்மையாகக் கண்டித்துள்ள சட்டத்தரணி க.சுகாஷ், டக்ளஸ் தேவானந்தா பற்றி கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது;

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடந்த காலம், தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் மிகநன்றாகத் தெரியும்.

‘கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறியக் கூடாது’ என்று சொல்லுவார்கள். டக்ளஸ் தேவானந்தா தான் செய்வற்றை மறந்துவிட்டு அல்லது தான் செய்தவற்றை மறைப்பதற்காக, தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்திருப்பார்கள் என்ற ஒரு நினைப்பில், தியாக தீபன் திலீபனை “கொலைகாரன்” என்று கூறியிருக்கிறார்.

டக்ளஸ் தேவானந்தா ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தை மறக்கின்ற அம்னீசியா என்ற வியாதி கிடையாது. நாங்களும் தமிழ் மக்களும் நல்ல சிந்தனைத் தெளிவிலே இருக்கின்றோம்.

ஆகவே தமிழ் தேசியம் சார்ந்த விடயங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றியும் அல்லது தியாக தீபம் திலீபனைப் பற்றியும் கதைக்கின்ற தகுதியோ அருகதையோ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குக் கிடையாது.

சொந்த இனத்தைச் சேர்ந்தவர்களையே கடத்தி, வலிந்து காணாமல் ஆக்கி, படுகொலை செய்து மற்றும் வன்கொடுமை செய்த உறுப்பினர்களைக் கொண்டிருப்பவர்களுக்கு தலைமை தாங்குகின்ற அமைப்பைச் சேர்ந்தவர்தான் டக்ளஸ் தேவானந்தா. இப்படியான ஒருவர் தனது இனத்துக்காக உணவு ஒறுப்பிலிருந்து உயிர்த் தியாகம் செய்து உலகத்துக்கே உண்மையான அகிம்சை என்பதை போதித்த தியாக தீபம் திலீபனைப் பற்றிக் கதைப்பதற்கு சிறிதளவேனும் தகுதி கிடையாது.

எனவே இப்படியான உணர்வுபூர்வமான தருணங்களில் தமிழ் தேசியம் சார்ந்த விடயங்களில் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருப்பதுதான் நல்லது.

அவர் தேர்தல் காலங்களில் உண்மைக்குப் புறம்பான விடயங்களை பரப்புரைக் கூட்டங்களில் தெரிவித்திருந்தார். அவருக்கு இவ்வாறு பிழையான விடயங்களை யார் கொடுப்பது என்பதும் எங்களுக்குத் தெரியும். டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் இவ்வாறான படுபொய்யான விடயங்களைப் பரப்பினால் ஆதாரத்தோடு பலவற்றை அம்பலப்படுத்துவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தமிழ் தேசியம் என்பது தமிழர்களுடைய பிறப்புரிமை. தியாக தீபம் திலீபன், தமிழ் தேசியத்துக்கு மறுபிறவி கொடுத்த அகிம்சையின் உச்சநிலைப் போராளி. எனவே அத்தகைய ஒரு தெய்வத்தைப் பற்றிக் கதைப்பதற்கு சாத்தான்களுக்கு அருகதை கிடையாது. டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எனவே சாத்தான்களையும் தெய்வங்களையும் தமிழ் மக்கள் வேறுபடுத்தி பார்க்கவேண்டும். சாத்தான்கள் வேதம் ஓதினால் அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் – என்றார்.

Related Posts