Ad Widget

திருகோணமலையில் மூன்று கிடைத்தால் முஸ்லிம்களுக்கு ஒன்று! – சம்பந்தன் உறுதிமொழி

திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றால், ஒன்றை முஸ்லிம்களுக்கே வழங்குவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை நியூ சில்வஸ்டர் ஹோட்ட லில் இடம்பெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும் போது, மத்திய அரசாங்கத்துடன் இணைவதால் முஸ்லிம்களுக்கு எதிர்காலம் கிடைக்கப் போவதில்லை. பிராந்திய அரசாங்கத்திலேயே தான் அவர்களுடைய எதிர்காலம் தங்கியுள்ளது. அவ்வாறான பிராந்திய அரசாங்கத்தினை நாம் அடையப் போகின்றோம். அதனை யாராலும் தடுக்க முடியாது.

வழமையாக புல்மோட்டையில் இருக்கும் முஸ்லிம்கள் அன்று முதல் எம்முடன் இருக்கிறார்கள். இன்று எமது கூட்டத்திற்கு கிண்ணியாவில் இருந்து பல முஸ்லிம் சகோதரர்கள் வருகை தந்துள்ளார்கள். முஸ்லிம் மக்களை பிரதிநிதித்து வப்படுத்தும் முதன்மை கட்சியாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் மறைந்த தலைவர் அஸ்ரப்பிற்கு பின் மாறியுள்ளது. ஏன் இக்கட்சி திருகோணமலையில் தனியாக போட்டியிட முடியவில்லை. பெரும்பான்மை கட்சியின் உதவி தேவைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அன்று மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒட்டிக்கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டபோது சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பானவர்கள் ஒழிந்துகொண்டார்கள்.

அழுத்தகம, கொழும்பு, பேருவளை, தம்புள்ள சம்பவங்கள் தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் உரையாற்றினேன். அதற்கும் அஸ்வர் போன்ற முஸ்லிம்களே இடையூறு செய்தார்கள். அம்மையார் நவநீதம்பிள்ளை அவர்களிடம் எமது பிரச்சினையை பேசும்போது முஸ்லிம்களின் பிரச்சினையை பற்றியும் பேசினேன். அப்போது அவர் முஸ்லிம்களை பற்றி பேச நீங்கள் ஒருவராவது இருக்கிறீர்களே என்றார்.

எனவே வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இணைந்திருப்பதே எமக்கு பலம் அவ்வாறு திருகோண மலையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தால் மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களை பெற முடியும். அவ்வாறு பெற்ற ஆசனம் ஒன்றை முஸ்லிம்களுக்கே நாம் வழங்குவோம் என தெரிவித்தார்.

Related Posts