Ad Widget

தினேஸ் குணவர்த்தனவுக்கு விக்னேஸ்வரன் பதிலடி!

வடமாகாண சபையில் நாங்கள் விடுகின்றபிழைகளை சுட்டிக்காட்டுங்கள். அதை விடுத்து தமிழர்களை பிரிவினைவாதிகளாக சித்தரித்து சுயலாபங்களை பெற்றுக் கொள்ள முனையாதீர்கள் என்று தினேஸ் குணவர்த்தனவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.

வடமாகாண சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பொது எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன,கடந்தகாலத்தில் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு நடந்ததே முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் நடக்கும் என தெரிவித்திருந்தார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர்-

தினேஸ் குணவர்த்தன அவருடைய தந்தை பிலிப் குணவர்த்தன போன்றே மிகவும் படித்த ஒருவர். அதனால் எங்களால் மதிக்கப்படும் ஒருவராகவும் அவர் இருந்திருக்கின்றார். நான் கொழும்பு றோயல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பிலிப் குணவர்த்தன எமது பாடசாலைக்கு அழைக்கப் பட்டிருந்தார். அப்போது எங்கள் பாடசாலையில் இடதுசாரிகளை நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை. நானே அவரை நிகழ்வுக்கு அழைத்திருந்தேன். அப்போது மாணவர்களுடைய கேள்வி நேரத்தில் மாணவன் ஒருவன் கேட்டிருந்தான் சமஷ்டி என்பது தவறானதா என, அதற்கு பதிலளித்த பிலிப் குணவர்த்த சமஸ்டி சிறந்த தீர்வு என பிரதமரே கூறியிருக்கின்றார்.பின்னர் எப்படி பிழையாக முடியும். அவருடைய மகனே இப்போது சமஷ்டி பிரிவினைவாதம் என கூறிக் கொண்டிருக்கின்றார்.

மேலும் வரதராஜ பெருமாளுக்கு நடந்ததே எனக்கும் நடக்கும் என தினேஸ் குணவர்த்தன கூறியிருக்கின்றார். வரதராஜ பெருமாள் வடகிழக்கு மாகாணங்களை தனி அலகாக தன்னிச்சையாக அறிவித்தார். ஆனால் நாங்கள் கேட்டிருப்பது சமஸ்டி. சமஷ்டி என்பது நாட்டை பிரிக்காமல் அந்த நாட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தங்கள் அடையாளங்களை பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்கான ஒரு தீர்வு முறையாகவே இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவில் மாநிலங்கள் தங்கள் மொழிகள் அடிப்படையில் சமஸ்டி அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இதற்குமேல் பிரிட்டனிடம் இருந்து ஸ்கொட்லாண், பிரான்ஸிடமிருந்து கியூபெக் போன்றன பிரிந்து தனியே போக விரும்பாமல் ஒன்றாக சமஷ்டி அடிப்படையில் இணைந்து வாழ்கின்றன.

மேலும் தினேஷ் குணவர்த்தன கூறியிருக்கின்றார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமை இருக்கின்றபோது வடமாகாண சபை தனியாக தீர்வு திட்ட முன்மொழிவுகளை முன்வைப்பதாக இந்தக் கருத்து ஒரு படித்த மனிதர் கூறும் பதிலா என கேட்க நினைக்கிறேன். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் அந்த உரித்து உள்ளது. மேலும் நாங்கள் கட்சியுடன் ஆராய்ந்த பின்னதாகவே இந்த முன்மொழிவுகளை தயாரித்துள்ளோம். கட்சியின் கடப்பாடுகளுக்கு வெளியே செல்லவில்லை.இதேபோல் வடமாகாண சபை மே மாதத்தில் பிரிந்து தனியாக செல்வதற்கான பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்ச்சியாக நடந்துவரும் விடயம்.

இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு சாதகமான தீர்வு திட்டங்கள் வருகின்றபோது எதிர்கட்சிகள் தமிழர்களை பிரிவினைவாதிகளாக காட்டி தங்களுடைய நலன்களை பெற்றுக் கொண்டு விடுவார்கள். இதனையே ஒன்றிணைந்த பொது எதிரணியும் செய்ய நினைக்கிறார்கள். இவ்வாறான பேச்சுக்களினாலேயே 1983ம் ஆண்டு இனக்கலவரம் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனவே வடமாகாண சபையில் நாங்கள் விடுகின்ற சில பிழைகளை சுட்டிக்காட்டுங்கள். அதை விடுத்து தமிழர்களை பிரிவினைவாதிகளாக சித்தரித்து உங்கள் சுயலாபங்களை பெற்றுக்கொள்ள விரும்பாதீர்கள் என முதலமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts