Ad Widget

திக்கம் வடிசாலை அதிகாரப்பிடிக்குள் சீரழிகின்றது – சிறிதரன்

Sritharanயாழ். மாவட்டத்தின் பாரம்பரிய பான உற்பத்தியின் அடையாளமாக இருக்கக்கூடிய திக்கம் வடிசாலை அண்மைக் காலமாக அதிகாரப்பிடிக்குள் சிக்குண்டு அதனோடு சீவல் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் ஆபத்து எதிர்நோக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக சிறிதரன் எம்.பி, நேற்று வியாழக்கிழமை (05) ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘வடபகுதியில் எமது மக்கள் காலம்காலமாக கள் உற்பத்தி தொழிலில் ஈடுபடும் சீவல் தொழிலாளிகள் வாழ்வு இன்று அதிகாரப்பிடிக்குள் சிக்குண்டு சீரழியும் நிலையில் இருக்கின்றது.

இணக்க அரசியல் என்ற போர்வையில் அரசாங்கத்தோடு சேர்ந்து நின்று கொண்டு வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் தாரை வார்த்துக்கொடுப்பதிலும் தமிழர்களுக்கு எதிரான எல்லா அநீதிகளுக்கும் துணைபோவதையும், தமது பிரகடனப்படுத்தப்படாத கொள்கையாக கொண்டு செயற்படுகின்ற கட்சியும் அதன் அமைச்சரும், இன்று வடபகுதி மக்களில், தொழில் ரீதியாக தமிழர் பொருளாதாரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் பங்காற்றி வருகின்ற சீவல் தொழிலாளிகளின் வாழ்வாதாரமான திக்கம் வடிசாலையை தமது சுயநல நோக்கங்களுக்காக கைப்பற்றி அதன் மூலம் கொள்ளை இலாபத்தை உழைக்கவும் தென்னிலங்கை பணமுதலைகளுக்கு பங்குகளை தாரைவார்க்கவும் முனையும் நோக்கில் திக்கம் வடிசாலையை இயங்கவிடாமல் மூடிவைத்திருக்கின்றார்கள்.

இதனால், யாழ்மாவட்டத்தில் சீவல் தொழிலோடு பிணைந்திருக்கின்ற 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் எதிர்காலத்தில் நிர்க்கதியாகும் நிலை ஏற்படுத்தப்படுகின்றது.

அன்றாட சீவியத்திற்கான தொழில் நிலையில் இருந்து வளர்ந்து கூட்டுறவு மயப்படுத்தப்பட்ட ஒரு நிறுவன ரீதியான நிலைக்குள் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னைய நல்லெண்ணம் படைத்தவர்களால் கட்டமைக்கப்பட்டுள்ள சீவல் தொழிலாளர்களின் பயணமும் வளர்ச்சியும் இன்று தடைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது திக்கம் வடிசாலையில் 5 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய மதுசாரம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மதுசாரத்தை கொழும்பிற்கு கொண்டு செல்கின்ற நடவடிக்கையில் தற்போது வடபகுதி அமைச்சர் ஒருவர் தீவிரமாக செயற்பட்டு வருவதாக தொழிலாளிகள் கவலை வெளியிடுகின்றனர்.

இந்த நிலை தடுத்து நிறுத்தப்படவேண்டும். மாறாக திக்கம் வடிசாலை திறக்கப்பட்டு யாழ். மாவட்ட சீவல் தொழிலாளர்களின் எதிர்காலம் சிறக்க அக்கறையுள்ள அனைவரும் முன்வரவேண்டும் என்பதுடன், இத்தகைய தொழிலாளர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல்கொடுக்கவும் முன்வரவேண்டும்.

மணித்தியாலத்துக்கு 1350 லீற்றர் உற்பத்தி செய்யக்கூடிய வடபகுதியின் மிகப்பெரிய வடிசாலையான திக்கம் வடிசாலை, மூடிப்பட்டிருப்பதன் பின்னணியில் எந்தவித பொதுநோக்கமும் இல்லை. சுயநலனைத் தவிர இலங்கையில் தென்பகுதி கித்துளால் அடையாளப்படுத்தப்படுவது போல வடபகுதி பனையாலும் பனம் கள்ளாலும் தான் அடையாளப்படுத்தப்படுகின்றது.

இந்த பனையும் பனம் கள்ளும் அதனுடனான உற்பத்தியும் வழிமுறைகளும் சரியாக கவனிக்கப்பட்டால், சந்தையில் செயற்கை பான உற்பத்திகளோடு போட்டிபோடுகின்ற நம்பிக்கையும் எதிர்காலம் பற்றிய தூரநோக்கும் வடபகுதி சீவல் தொழிலாளர்களிடம் உண்டு.

யாழ்மாவட்டத்தில் ஏராளமான கள் விற்பனை நிலையங்கள் உள்ளன. அதற்கு மேலாக பனை தென்னை வள கூட்டுறவுச்சங்கங்கள், அதன் மேலாக சமாசங்கள் உள்ளன. அனைத்தின் அடிப்டையாகவும் அடித்தளமாகவும் மிகவும் ஆபத்தான தொழிலை செய்யும் சீவல் தொழிலாளர்களே இருக்கின்றார்கள்.

கள் இறக்கும் போது இருக்கக்கூடிய வலிகள் அவர்களுக்கே தெரியும். அந்த வலிகள் பெரிது, சிறுகச் சிறுக சேமித்து அந்த தொழிலாளிகள் தமது அன்றாட சீவியத்தை ஓட்டுகின்ற நிலையை யாவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

யாழ் மாவட்டத்தில் அருந்தியது போக எஞ்சி இருக்கின்ற கள் வெறுமனே ஊற்றப்படுகின்ற நிலை இருக்கின்றது. இதற்கு காரணம் திக்கம் வடிசாலை மூடப்பட்டு இருப்பதே. திக்கம் வடிசாலை என்பது வெறுமனே சாராய உற்பத்தி நிறுவனம் அல்ல. அதனுடாக ஏராளம் உப உற்பத்திகளும் சந்தைக்கு வரும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியதாக இருக்கின்றது.

எமது மண்ணின் தொழிலாளர்களின் எண்ணத்தால் வியர்வையால் உருவான திக்கம் வடிசாலை தமது சுயநல நோக்கங்களுக்காகவும் எங்கிருந்தோ வரும் முதலாளிகள் வருமானம் பெற்றுக்கொள்வதற்காகவும் கைமாறும் நிலையை யாவரும் கண்டிப்பதுடன் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வடபகுதி மக்கள் பிரதிநிதிகள் முயல வேண்டுமென வேண்டிக்கொள்ள வேண்டியது இந்த காலத்தின் கடமையாக இருக்கின்றது.

அரசாங்கத்தோடு சேர்ந்து நிற்கும் வடபகுதி அதிகார தரப்பால் தாம் அடிமைகளாக நடத்தப்படுவதாகவும் தமக்காக குரல்கொடுக்க யாரும் இல்லையா என ஏக்கத்துடன் யாழ். மாவட்டத்தின் சீவல் தொழிலாளிகளின் இன்றைய நிலை காணப்படுகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது நம் எல்லோரதும் கடமை’

என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts