தற்போதைய சூழ்நிலைகளை எமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்க கூடாது என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.
மாகாண அவைத்தலைவர்களின் 8 ஆவது மாநாடு யாழ்.மாதகல் பகுதியில் உள்ள கடற்படையினரின் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றபோதே அதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் பேசும் மக்களுடைய இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கின்ற மாகாணசபை முறைமை ஆரம்பித்து கிட்டத்தட்ட 30 வருடங்களாகின்ற நிலையில் அது உண்மையாகவே தமிழ் பேசும் மக்களுடைய பிரதேசமான வடக்கிற்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே உருவாகின.
அந்தவகையிலே, தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் நாங்கள் இந்தநாட்டின் பிரஜைகளாக சகோதரர்களாக சம உரிமையோடு எங்களுடைய மொழியையும், கலாசாரத்தையும், மதங்களையும் பாதுகாத்துக் கொண்டு, எங்களுடைய பாரம்பரிய நிலங்களில் நிர்வாக முறையினை ஏற்படுத்தி அதில் வாழ்வதற்கே நாங்கள் விரும்புகின்றோம்” என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார்.