Ad Widget

தம்பி ‘டீ’ இன்னும் வரல – நையாண்டிப் புலவர்

-நன்றி நியு யப்னா இணையம் –
தமிழீழம் எமக்கு வேண்டும். இன்னும் ஆயிரம் சிவகுமார்கள் இந்த பூமியில் எழுவார்கள் என அந்த நேரம் எங்கட அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையக்கரசியார் சொன்னார். கடைசியில் அமிர்தலிங்கம் உசுப்பேற்றி விட்டு அந்த உசுப்பேற்றல் புயலில் சிக்குப்பட்டு மரக்கொப்பில் இருந்து மரம் தறிச்சது போல தான் தோண்டிய குழியில் மூடுப்பட்டு உயிரிழந்தார்.

சிங்களவன் எங்களுக்குச் செய்யிற அக்கிரமம் வெளிப்படையாகத் தெரிஞ்ச ஒண்டு தான். எங்கட குடும்பத்துக்குள்ள இருக்கிற போட்டிஇ பொறாமைஇ சந்தேகம் போன்றவற்றையே தீர்;க்க முடியாமல் இருக்கு. இரண்டு இணங்களுக்கிடையில் இருக்கிற பிரச்சனையை எப்படித் தீர்க்கிறது. தமிழர்கள் இலங்கையில் மட்டும்தான் சிறுபான்மையினர். ஆனால் உலக அளவில் எங்கள் இனம் ஓரளவு பெரும்பான்மையானது. இருந்தும் நாங்கள் தோல்வி அடைந்து உள்ளோம். இதற்கான காரணங்கள் ஏராளமாய் இருக்கு. இவற்றை எல்லாம் பட்டியலிட்டு சொன்னாலும் எந்த வித பிரயோசனமும். இல்லை. ஏனெனில் அவ்வாறு சொன்னாலும் யாரும் திருந்தப் போறதும் இல்லை. அவற்றைப் பின்பற்றி போராடப்போவதும் இல்லை.

தன்னைக் கடித்த நுளம்பையும் காதுக்குள் ரீங்காரமிட்ட இலையான்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் துரோகிகள் என அறிவிக்காது அவற்றையும் அழிக்காது விட்டதுதான் விடுதலைப்புலிகள் செய்யாத ஒரே ஒரு புத்திசாலித்தனமான செயல். றோட்டில போறவன் ஏதோ கோபத்தில பேசினாலும் அவனையும் துரோகியாக்கியவர்கள் விடுதலைப்புலிகள்.

உண்மையான துரோகிகளை இனங்காணமல் இருந்தது அவர்கள் செய்த மிகப் பெருந் தவறு. விடுதலைப் புலிகள் மறைந்தவுடன் அவர்களின் எச்ச சொச்சமாக இருக்கும் புலம்பெயர் பினாமிகளின் கூத்தையும் நமது தேசத்தில் நமது தலைவர்கள் எனத் தெரிவிக்கும் சிலர் செய்யும் செயல்களையும் வைத்துப் பார்க்கும் போது உண்மையான துரோகிகள் நம் கண் முன் தெரிகின்றார்கள். இவர்களால் பகுத்தறிவு இல்லாத தமிழர்களின் மனங்களை இருட்டாக்கியுள்ளது.

இன்று இருக்கின்ற நிலையில் நான் கூட என்னைப் புலிகளின் தலைவராக அறிவிக்கலாம் என யோசிப்பது உண்டு. வெளிநாடு ஒன்றுக்கு ஓடுவதுஇ அங்கிருந்து கொண்டு ஏதாவது ஒரு ஊடக ஆதரவை கையில் எடுத்துக் கொண்டு என்னை நானே புலிகளின் தலைவன் என அறிக்கை விடலாமா என யோசனை வருவதுண்டு. போரினால் எனக்கும் சில காயங்கள் இருந்தால் அதனை வைத்து களத்தில் நின்று போராடிய நான் உங்கள் முன் வந்திருக்கின்றேன் என அறிவித்தல் விடலாம் என யோசிக்கின்றேன்.

புலிகளின் தலைவருடன் புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பம் எனக்கு இருந்தும் கூட அதனை நான் துர்அதிஸ்டவசமாக இழந்துவிட்டேன். அல்லாது விடின் அதை வைத்தே நான் சீமான் ஆகியிருப்பேன். நானும் ஆக்ரோசமாக கதைக்கக்கூடியவன். தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப கதைக்கக் கூடியவன். ஆனால் யுத்தத்தில் நேரடியாக பங்கேற்று துப்பாக்கி ஏந்திய ஒரு புலிப் போராளிக்குக் கூட தேனீர் வைத்துக் கொடுக்க முடியாமல் பயத்தில் ‘பங்கருக்குள்’ இருந்தவன்.

சிலவேளைகளில் நான் சிந்திப்பது உண்டு. அது என்னவெனின் ‘எங்கள் மாண்புமிகு? ஜனாதிபதி நீண்ட நாட்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று. ஏனெனில் சிறீமா வந்து தழிழர்களுக்கு செய்த அழிவை விட ஜேவர்த்னா செய்த அழிவு கூடுதலானது. அப்படியே பிரேமதாசா வந்தார்… குண்டு போட்டார். சந்திரிக்கா வந்தார் யாழ்ப்பாணத்தைப் பிடித்தார். சனத்தை அழித்தார். எங்கட மகிந்த வந்தார்… !!! இனி நான் சொல்லவில்லை. இவ்வளவு காலமும் இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழர்களுக்கு செய்த அழிவு வேலைகள் ஆர்முடுகளில் போய்க் கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே இனி வரப்போறவன் என்ன செய்வான் என இப்பவே தெரிஞ்சிருக்க வேண்டும்.

எங்கட ஜனாதிபதியை சிங்கள மக்கள் வாழ வைக்கினமோ தெரியாது. ஆனால் தமிழர்கள் நன்றாக வாழ வைக்கினம். எங்கட ஜனாதிபதி மேல் சிங்களவனுக்கு சலிப்பு வரத் தொடங்க அந்தச் சலிப்பை இல்லாமல் செய்வது நம்மட தமிழர்கள் தான்.

குறுக்கால போவாங்கள் செய்யிற வேலைகளால சிங்களச் சனம் மகிந்தவை மன்னனாக நீண்டநாள் வைச்சிருக்கும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.

ஜெனிவாவில் மகிந்தவுக்கு ஆப்பு வைச்சு விட்டாச்சு என்று பெருமிதப்படுகிறவங்கள் யாராவது எனக்கு முன் நின்றால் நானும் ஒரு கொலைகாரன் ஆவேன். ஜெனிவாவின் பின் இலங்கையில் ஒரு தேர்தல் உடனடியாக நடந்திருந்தால் அதில் 99 வீத சிங்களவர்களின் விருப்பு வாக்கை நம்மட மகிந்த பெற்றிருப்பார். மகிந்த மீது சலிப்புற்றவர்கள் எல்லாம் அனைத்தையும் மறந்து ஒன்று பட்டு நின்றார்கள்.

புலம்பெயர் தமிழர்கள் செய்கின்ற ஒவ்வொரு போராட்டமும் எங்களின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பூக்களால் அர்ச்சனை செய்வது போல் இருக்கும்.. இவன் கே.பி யை வைத்து அரசாங்கம் இவ்வாறு புலம்பெயர் தமிழர்களை செய்யத் துண்டுகின்றதோ என்று நான் சில வேளை நினைப்பதுண்டு.

இந்தியத் தமிழ் தலைவர்களை நம்பிப் பலன் இல்லை என்பதும் அவர்கள் தமது வயிற்றுப் பிழைப்பிற்காகவும் அரசியில் பிழைப்பிற்காகவும் இவ்வாறு எம்மை உசுப்பேற்றம் செய்பவர்களை நாம் தலைவர்கள் என்று கூறுவது எமது இனத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரும் துரோகத்தனம்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெறும் செயல்களால் நன்மையடைந்தவர்கள் யார் எனக் கணக்கிட்டால் நிச்சயம் அது தமிழ்ச் சமூகமாக இருக்காது.

எமக்காகப் போராடி இறந்த உண்மையான மதிப்பு மிக்க போராளிகளின் தியாகத்தைப் போற்றுவதற்காகவும் அவர்களை நினைவு கூறுவதற்காகவும் நிச்சயம் நாம் அதற்கென ஒரு தினத்தை ஒதுக்கிக் கொண்டாடுதல் அவசியம். ஆனால் அந்தக் கொண்டாட்டத்தால் பலமடையப் போவது எங்கள் ஜனாதிபதியும் அரசாங்கமும் மற்றும் சில தமிழ் அரசியல்தலைவர்களுமே. இந்தப் போராட்டத்தை வைத்து சிங்களச் சமூகம் உலக அரங்கில் ஏராளமான நன்மை அடையப்போவது திண்ணம். பகுத்தறிவுள்ள தமிழ்ச் சமூகம் அதை உணரும். புலிகள் இன்னும் இருக்கின்றார்கள் என கூறி மீண்டும் எம் மீதும் நிராயுதபாணிகளாக நிற்கும் விடுதலைப் போராளிகள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடும். தற்போது மீண்டும் வீதிச் சோதனைகள் வந்துள்ளது. உலகமுமு; எம்மைப் பற்றி அறிக்கைகள் விட்டு விட்டே நாம் சாவதை கண்ணூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கும்.

பல்கலைக்கழகத்தினுள் ஆமி புகுந்தவுடன் எங்கட சரவணபவன் எம்.பி கருனைப்பட்டு ஓடியதை நினைக்கையில் கண்களால் இரத்தம் வருகின்றது. என்ன அக்கறை அவருக்கு……. வழமையாக இவ்வாறான பிரச்சனைகளுக்கு இரு பொம்பிளைப் பிள்ளைகளும் ஒரு புகைப்படக்காரரும் தான் அங்க போய் படம் பிடிக்கிறவங்கள். அன்று உதயன் ஆசிரியரே களத்தில் நின்றார் என்றால்… அதன் அர்த்தம் என்ன?????

வருக்காலத்தில் எம்.பி. சரவணபவன் தமிழத்தேசியத் தலைவராக வருவதற்கான ஒரு ஆயத்த நடவடிக்கையே அதுவாகும். அவரது மாவீரர் பற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் மேல் வைத்த பற்றும் நிச்சயம் அவரை தமிழ்த் தேசியத் தலைவராக்கும் நிலைக்குக் கொண்டு வரும்.

ஆனால் அதற்கும் ஆப்பு வைக்குறதுக்கு கூட்டமைப்புக்குள்ளும் ஆக்கள் இருக்கிறார்கள் என்பது எங்கட எல்லாருக்கும் தெரியும். அத்துடன் நம்ம மகிந்தவுக்கும் தெரியும்.தற்போது தமிழத்தேசியத் தலைவராக மாறுவதற்கு ஊடகம் ஒன்றை வைத்திருக்க வேண்டியது மிகுந்த அவசியம் என்பது அனைவருக்கும் புலப்படும்.

சிங்களவனை நாம் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு எமது கல்வியைக் கூட பயன்படுத்த முடியாத பின் தங்கிய நிலையில் நிற்கின்றோம். கடந்த முறை நடைபெற்ற நிர்வாக சேவைப் பரீட்சையில் ஒரு தமிழர் கூட திறமையான முறையில் சித்தியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையாவது எமது உணர்வு மிக்க மாணவர்கள் உணர்ந்து செயற்பட்டு முன்னேற்ற வேண்டும்.

எம்மை தமது கறிக்கு உபயோகிக்கும் கருவேப்பிலையாகத் தான் உலக நாடுகள் பயன்படுத்துகின்றார்கள் என்பது முள்ளி வாய்கால் முடிவில் உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு உணராது இன்னமும் உலகநாடுகள் எமக்கு குரல் கொடுக்கும் என மடைத்தனமாக நம்பினால் எம்மை ஆண்டவனும் காப்பாற்ற முடியாது.

நாம் இப்போது செய்ய வேண்டியது என்ன என்பது எவருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. சிங்களவர்களிடம் இருந்து மகிந்தவைப் பிரிப்பதற்கு நாம் ஆப்பாகத் தொழிற்பட்டாலே தவிர வேற எந்த யுக்தியும் தற்போது சரிப்பட்டு வராது. ஆனால் அதற்கு எமது தமிழ்த் தலைமைகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

ஏனெனில் அவர்கள் அரசியல் செய்வதற்கு நிச்சயம் இந்த இனப் பிரச்சனை முக்கிய இடத்தில் இருக்கி;றது. அத்துடன் அவர்களுக்கு எங்கட அமைச்சர் டக்ளஸ் இருக்கின்றார் அரசியல் செய்வதற்கு.

மகிந்தவிற்கு தமிழர்கள் இல்லாவிட்டால் அரசியலில் பிரகாசிக்க முடியாதது எப்படியோ அதே போல தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கும் மற்றும் சிலருக்கும் டக்ளஸ் இல்லா விட்டால் அரசியல் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றார்கள். இவ்வாறு இல்லாமல் தீர்க்கமான முடிவுகள் எடுத்து குழுவாகச் செயற்பட்டு ஒன்றாகி மகிந்தவுடன் நீங்கள் சேர்ந்து பாருங்கள். மகிந்த சொல்லும் எந்த விடயத்திற்கும் ஒத்துக் கொண்டு பாருங்கள். அடுத்த ஒருவருடத்திற்குள் எல்லா சிங்களவர்களும் எதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மகிந்தவை ஓரங்கட்டிவிடுவார்கள்;.

அதன் பின்னரும் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டு சிங்களவர்களுக்குள் புகுந்து விளையாடினால்; தமிழர்கள் நினைக்கும் சில விடயங்கள் இலகுவாக கிடைத்துவிடும்.

இவ்வளவையும் வாசித்து விட்டு கொலை வெறியில் உணர்வு மிக்க தமிழர்கள என்னைத் தேடிக் கொண்டு என்னிடம்; வந்தால் அவர்களுக்கு நான் சொல்லுவது இதுதான்………….

தம்பி… ரீ என்னும் வரவில்லை…………..

நையாண்டிப் புலவர்

-நன்றி நியு யப்னா இணையம் –
http://www.newjaffna.com/fullview.php?id=MjUzNjQ=

Related Posts