Ad Widget

முதலமைச்சர் விக்கி தலைமையில் தமிழ் மக்கள் பேரவை உதயம்!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் தலைமையில் ‘தமிழ் மக்கள் பேரவை’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான செய்திகள்  வெள்ளிக்கிழைமை இரவு தெரியவந்திருந்தது எனினும் கூட்டவிபரங்கள் இரகசியமாகவே பேணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெற்ற இரகசிய கூட்டத்திலேய இந்தக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணல், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பொறுப்புக்கூறலை கண்காணித்தல், கலாசார சீரழிவுகளை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியனவற்றை இலக்காகக் கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புளொட் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசன் தமிழரசுக்கட்சி இணைத்தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் ,  வலம்புரி பத்திரிகை ஆசிரியர் விஜயசுந்தரம் , பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்  மற்றும் , மதகுருமார்,  பங்கேற்ற கூட்டத்திலேயே இந்த அவை உருவாக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் உரை.

வைத்திய கலாநிதி லக்ஸ்மன் உரை

இந்த இரகசிய கூட்டத்துக்கு உள்ளே ஊடகவியாலாளர்கள் எவரும் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.

தமிழ் மக்கள் அவையின் தலைவராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் இதன் கூட்டுத் தலைவர்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி பி.லக்ஷ்மன் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூகச்செயலாளர் திரு.வசந்தராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசியல் விடயங்களைக் கையாளவும், கலாசார சீரழிவுகளை கட்டுப்படுததவும் என இரு உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

12

அமைப்பின் உருவாக்கம் குறித்து அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு

மதத் தலைவர்கள், வடக்கு மாகாண சபையின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இணைந்து தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாப்பதையும் வலியுறுத்துவதையும் நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பே தமிழ்மக்கள் பேரவையாகும்.

வடக்கு மாகாண சபை முதலமைச்சர் மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்களைத்தலைவராகவும் வைத்திய நிபுணர் பு.லக்ஷ்மன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தின் செயலாளர் திரு.ரி. வசந்தராஜா ஆகியோரை இணைத் தலைமையாகவும் கொண்ட பேரவையானது மதத் தலைவர்களையும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டமைந்த அமைப்பாகும்.

தமிழ்மக்களின் நலன்கள், உரிமைகள், அபிலாசைகள் என்பவற்றை அடையும் பொருட்டும்
அவற்றை அடையாளப்படுத்தும் பொருட்டும் அமைக்கப்பட்ட தமிழ்மக்கள் பேரவையானது தேவையான கட்டமைப்புக்களுக்கும் துறைகளுக்கும் பொருத்தமான நிபுணர்களை இனங்கண்டு அவர்களை உள்ளடக்கியதான உபகுழுக்களை அமைத்துக்கொள்ளும்.

இந்த உப குழுக்கள் தமக்குக் குறித்தொதுக்கப்பட்ட இலக்குகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்கும் என்பதுடன் தேவையான சந்தர்ப்பங்களில் உப குழுக்களின் பணிகள் நீண்டு செல்லும் பொருட்டு நிலைத்தனவையாகவும் அமையும். தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவானது தேவைகளுக்கமைவாக பேரவையைக் கூட்டி தீர்மானங்கள் எடுக்கின்ற ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும்.

தமிழ்மக்களின் நலன்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்மக்கள் பேரவையில் தற்போது இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது முற்றுப்பெற்றதன்று. இன்னமும் சில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள் பிரதிநிதித்துவம் என்பன உள்வாங்கப்படவேண்டிய தேவையுள்ளது. இத் தேவையை நிறைவு செய்யும் பணியில் ஏற்பாட்டுக் குழு சம்பந்தப்பட்டவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்றையதினம் (19.12.2015) அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையானது நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படும் போது அதனால் தமிழ்மக்கள் காத்திரமான பெறுவனவுகளை அனுபவிப்பர் என்பது உண்மை.

தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு தமிழ்மக்களின் உரிமைகள் , நலன்கள், அபிலாசைகள் என்பவற்றை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் நலன்பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம் என்ற பேருண்மை இவ்விடத்தில் உணரப்படவேண்டியதாகும்.

இலங்கை மண்ணில் தமிழ்மக்கள் சுதந்திரத்துடனும் உரிமையுடனும் வாழ்வதற்கான ஒரு நிரந்தரமான சூழமைவு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்வர் என்று நாம் நம்புகின்றோம். அதேவேளை தமிழ்மக்களுக்கான உரிமையை வழங்குவதென்பது இந்த நாட்டில் வாழும் எந்த இனத்திற்கும் பாதகமானது அல்ல என்ற நிதர்சனத்தையும் இதனோடு சம்பந்தப்பட்ட அனைவரும் முதலில் புரிந்து கொண்டாக வேண்டும்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழினம் படுகின்ற துன்பங்கள், துயரங்கள் என்பன சிறுபான்மையின மக்கள் என்ற ஒரே காரணத்திற்கான அனுபவிப்பாக மட்டும் இருந்து விடவில்லை. மாறாக பல்லின மக்களின் இருப்பை- ஒன்றுக்கு மேற்பட்ட சமயங்களின் அனுஷ்டிப்பை- தமது மொழி தவிர்ந்த ஏனைய மொழிகளை அங்கீகரிக்க முடியாத வக்கிரங்களின் வெளிப்பாடாகவும் இருப்பதை நாம் கண்டு கொள்ள முடியும். எனவேதான் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வுகான முடியாத துர்ப்பாக்கியநிலை காணப்படுகிறது.

 

இத்தகைய தோல்விகளின் எதிர் விளைவுகள் காலத்திற்குக் காலம் தமிழின சங்காரவேள்வியாக
அரங்கேறி வருகிறது. பேரினவாத உசுப்பேற்றல்கள் அதற்கான முரசுகளின் முழக்கங்களை மீண்டும் பேரினவாத சக்திகள் முழங்க, உருவேற்றம் உச்சமாகி அதன் உச்சமே 2009 இல் வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடந்த தமிழ் இனத்தின் சங்காரமாகும்.

 

இந்நிலையில் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சர்வதேச சமூகத்தின்
காத்திரமான வகிபங்குடன் மட்டுமே சாத்தியமாகும் என்ற நிஜம் வெளிப்படுகிறது.
எனினும் அந்தத் தீர்வு என்பது நடந்து முடிந்த யுத்தத்தின் இழப்புகளுக்கான சமாளிப்புக்களாகவோ அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வு தேவை என்று வலியுறுத்துகின்ற அரசியல் தரப்புகளை சாந்தப்படுத்துகின்ற சம்பிரதாயங்களாகவோ இருந்து விடக்கூடாது.

அத்தகையதொரு தற்காலிக ஏற்பாடுகள் தமிழ்மக்களின் எதிர்கால நிலைமைகளை மிகவும்
மோசமானதாகவே ஆக்கிக்கொள்ளும். ஆகையால் தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வு
என்பது தமிழ்மக்களின் அபிலாசைகளை, அவர்களின் வாழ்வியலுக்கான உரிமைகளை, சுயநிர்ணயத்தின் பண்புகளை தாராளமாகக் கொடுப்பதாக இருத்தல் வேண்டும். இத்தகையதொரு நிலைமையில் தனிமனிதர்களின் தீர்மானங்களை, ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது.
ஆக, இழப்புக்களைச் சந்தித்தவர்கள் துன்பங்களைச் சுமந்து அதன் அனுபவிப்புக்களால் உருக்குலைந்து போயுள்ள போதிலும் ஒரு காத்திரமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழுகின்ற தமிழ்மக்களின் அங்கீகாரம் பெற்ற தீர்வுகளே தேவையானவையாகும். எனினும் இத்தகைய தீர்வை வழங்குவதில் இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்த எந்த அரசுகளோ, பெரும்பான்மை இனம் சார்ந்த கட்சிகளோ முன்வரவில்லை.

 

இத்தகையதொரு நிலைமையில் பொதுமுடிவை எடுப்பதில் அரசியல் என்ற எல்லை கடந்து ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்யக்கூடியதான அமைப்பு தேவைப்படுகிறது. அந்த இலக்கை ஈடு செய்யக்கூடியது என்ற நம்பிக்கையோடு மதபீடங்கள், அரசியல் தலைமைகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த ஓர் அமைப்பாக தமிழ்மக்கள் பேரவை உருவாகியுள்ளது.

இலங்கையில் நிரந்தரமான அமைதியும் சமாதானமும் சாந்தியும் நிலைக்க வேண்டுமாயின் அது
தமிழ்மக்களின் அபிலாசைகளை, உரிமைகளை வெறுப்பின்றி வழங்குவதன் மூலமே சாத்தியமாகும் என்ற மெய்மையில் தமிழ்மக்கள் பேரவை இந்த நாட்டிற்கும் அனைத்து இனத்திற்கும் உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.இங்கு அரசியல் நோக்கங்களோ இனத்துவ வக்கிரங்களோ பழி தீர்க்கும் எண்ணங்களோ அறவேயில்லை என்பது சத்தியமானது.

தமிழ்மக்கள் பேரவை தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற எல்லைகளுடன் மட்டும் தனது பணியை மட்டுப்படுத்தாமல் தமிழ்மக்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களைப்பாதுகாத்தல், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக மேம்பாட்டில் கரிசனை கொள்ளுதல், எங்கள் பொருளாதாரத்தை- வளப்பயன்பாடுகளை உச்சமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் என்ற உத்தரவாதமும் இங்கு தரப்படுகிறது.

என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைப்பு சம்பந்தமாக தெரியவரும் ஏனைய விபரங்கள் வருமாறு

செயற்பாட்டு க்குழுவில் தற்போது பின்வருவோர் இடம்பெற்றுள்ளனர்

01. சிவசிறீ சபா வசுதேவ குருக்கள் (நல்லை ஆதீனம்)
02. வண ஜெயபாலன் குரூஸ் (மன்னார்)
03. வண எஸ்.வி.பி மங்களராஜா
04. திரு சி.கே.சிற்றம்பலம் (உபதலைவர் – இலங்கை தமிழ் அரசு கட்சி)
05. நா.உ த.சித்தார்த்தன் (தலைவர் – புளட் ஒட்டுக்குழு)
06. கந்தையா பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈபிஆர்எல்எப்)
07. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
08. பேராசிரியர் வி.பி.சிவநாதன் (போசகர் – யாழ்ப்பாணம் பொருளாதார நிபுணர் சங்கம்)
09. கலாநிதி கே.பிரேமகுமார் (முன்னாள் தலைவர் – விவசாய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்)
10. திரு கே.சதாசிவம் (மட்டக்களப்பு)
11. திரு எஸ்.சோமசுந்தரம் (பொருளாளர், மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்)
12. திரு முரளீதரன் (திருகோணமலை)
13. திரு வி கோபாலபிள்ளை (அம்பாறை)
14. கலாநிதி ஜி.திருக்குமாரன் (தலைவர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்)
15. கலாநிதி ஏ.சரவணபவான் (துணைத்தலைவர் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்)
16. வண ரவிச்சந்திரன் (யாழ்ப்பாணம் மறைமாவட்டம்)
17. சட்டவாளர் வி.புவிதரன் (தலைவர் – தமிழ் சட்டவாளர்கள் சங்கம்)
18. திரு என்.சிங்கம் (செயலாளர் – தமிழ் சிவில் சமூக அமையம்)
19. திரு என்.இன்பநாயகம் (தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்)
20. திரு எம்.சிவமோகன் (இரணைமடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)
21. திரு தேவராஜ் (தலைவர் – வவுனியா சிவில் சமூக அமையம்)

அலுவலக ஒருங்கிணைப்புக்குழுவில் பின்வருவோர் இடம்பெற்றுள்ளனர்

01. மருத்துவர் எஸ் சிவன்சுதன்
02. திரு என் விஜயசுந்தரம் (வலம்புரி ஆசிரியர்)
03. திரு அலன் சதிதாஸ்
04. திரு எஸ் ஜனார்த்தனன்

உபகுழுக்களாக அரசியல் , கல்வி , சுகாதாரம் , சமூகபொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி, விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், கலை பண்பாடு ஆகிய
7 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன முதற்கட்டமாக அரசியல் ,கலை பண்பாடு ஆகியவற்றுக்காக உபகுழுக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

உருவாக்கப்பட உள்ள அரசியல் உபகுழு 27 டிசம்பர் இல் இருந்து  தனது பணிகளை முன்னெடுக்கும் என்றும் தெரியவருகின்றது.

 

Related Posts