Ad Widget

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பது அவசியம் – மனோ

புதிய தேர்தல் முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகை 250 ஆக அதிகரிக்கப்படுமானால், மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

mano - ganesan

இந்த அடிப்படையில் நுவரேலியா மாவட்டத்தில் 5, கொழும்பில் 3, பதுளையிலும், கண்டியிலும் தலா 2 என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இடமிருக்க வேண்டும்.

தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்திப் பிரதிநிதிகளை தெரிவு செய்யாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை மாவட்டங்களில் தமது சனத்தொகைக்கு ஏற்ப தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்துக்கொள்ள புதிய தேர்தல் முறைமையில் இடமிருக்க வேண்டும் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவருமான மனோகணேசன் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை நேரில் சந்தித்து கையளித்த ஆவணத்தில் கோரியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் மனோ கணேசன் கூறியதாவது:

இன்றைய தேர்தல் முறைமை மாற்றப்பட்டு விருப்பு வாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும், தொகுதிக்கு என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற யோசனைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அந்த மாற்றங்கள் ஒருபோதும், இன்று சிறுபான்மை இனம் அனு பவிக்கும் பிரதிநிதித்துவங்களைக் குறைத்து விடக்கூடாது. விருப்புவாக்கு முறைமை ஒழிக்கப்பட வேண்டும், தொகுதிக்கு என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று இன்று குரல் எழுப்பும் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு சிறுபான்மை இனம் இன்று அனுபவிக்கும் பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

புதிய தேர்தல் முறை மாற்றத்தின் போது, இந்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்றுள்ள ஜனத்தொகை வளர்ச்சி, இடம் பெயர்வு, குடியேற்றம் ஆகியவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும். மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மை இனத்து மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் சிறு பான்மை மக்களே உத்தேச தேர்தல் முறை மாற்றங்கள் காரணமாக அதிகம் பாதிப்பு அடையும் அபாயத்தை எதிர்நோக்குகின்றார்கள்.

எனவே தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நாம் அதிக அச்சம் கொண்டுள்ளோம். இந்த அச்சம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இந்த நாட்டின் சமீபகால வரலாற்றில் தற்போதைய நடப்பு தேர்தல் முறையே தமிழ்-முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு அதிகபட்ச பிரதிநிதித்துவங்களை வழங்கியுள்ளது.

எனவே இந்த தேர்தல் முறையை மாற்றுவதானால் எங்களது குறைந்தபட்ச உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் புதிய தேர்தல் முறை மாற்றத்துக்கு நாம் உடன்பட முடியாது என்றார்.

Related Posts