Ad Widget

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்!

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

கைதுசெய்து நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமெனவும், பலகாலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகள் யாவும் தமிழர் பிரதேசத்து நீதிமன்றங்களுக்கு மாற்றப்படவேண்டுமெனவும் வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமது விடுதலையைத் தாமதப்படுத்தும் பட்சத்தில் தாம் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அவர்களைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் தமது விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிறீலங்கா அதிபர் மற்றும் பிரதமருடன் கலந்துரையாட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர், அவர்களின் இக்கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Related Posts