தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக
முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளார் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கட்சி அலுலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக்கோரி கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி யாழ்.செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியதுடன் ஜனாதிபதிக்கு யாழ்.அரச அதிபர் ஊடாக மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்தோம். ஆனால் இந்த நிமிடம்வரை அதற்கான பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில், யாழ்ப்பாணம் வருகைதரவிருக்கும்; ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், எமது எதிர்ப்பைக் காட்டும் வகையிலும் இப்போராட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளதோடு சிறைகளில் வாடும் எமது சகோதர, சகோதரிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (3) 10 மணிக்கு எமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரவுள்ளோம்.
இவ் உண்ணாவிரத போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (5), 5 மணிவரை இரவு பகலாக மூன்று நாட்கள் தொடரவுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஆதரவு தந்து இவ்வுண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்பீர்கள் என மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.