Ad Widget

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் சதி!- கஜேந்திரகுமார்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மறைத்து வருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வதேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்து வருகின்றதெனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன காலதாமதமாகின்றதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“2015ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென கூறப்பட்டிருக்கின்றது. அதற்கு இலங்கை அரசாங்கமும் தனது இணக்கப்பாட்டினை தெரிவித்திருக்கின்றது.

அதற்கான நியாயங்களாக, சர்வதேச மனித உரிமைகள் கோட்பாடுகளை முற்றாக உதாசீனம் செய்வதாலும், கைதிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என கூறப்பட்டது.

அவ்வாறான பயங்கரமான சட்டத்தின் கீழேயே தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அணுகுமுறை மிகவும் பலவீனமானதாக உள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அரசு இணங்கியதாக கூறியதை பெரிய விடயமாக கூறிய தமிழ்தேசிய கூட்டமைப்பு, அதனை நடைமுறையில் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசு தவறியுள்ளமையை சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பதற்கு தவறியுள்ளது.

அதேபோல் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம் வருகிறது. அது இருப்பதை காட்டிலும் மோசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பே பல இடங்களில் கூறியுள்ளது. அக்கருத்துக்கள் வெறுமனே தமிழ் மக்களுக்கு மட்டும் கூறப்படும் கருத்துக்களே ஆகும்.

இதனால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய அரசியல் கைதிகள், இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவது துரதிஷ்டவசமானது. மக்களின் அங்கீகாரத்தை பெற்ற அரசியல் தலைமைகளே அதனை செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றில் நடத்துமாறுகோரி போராட்டம் நடத்த தயாரானபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் அப்போராட்டத்தை குழப்பினார்.

இந்நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யவேண்டுமென கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர்.

அவர்களுடைய போராட்டங்களுக்கு நாம் ஆதரவு வழங்குவதுடன், அவர்களுடைய போராட்டங்களை வலுப்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளையும் நடத்த திட்டமிட்டு வருகிறோம். இது தொடர்பாக பொது அமைப்புக்கள், கல்வி சமூகம் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.

இது வெறுமனே அரசியல் கைதிகளுடைய பிரச்சினையோ அல்லது அவர்களுடைய குடும்பங்களுடைய பிரச்சினையோ அல்ல. இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினதும் பிரச்சினை ஆகும்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts