வவுனியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர் பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பிலும் அதன் செயலாளர் நாயகம் என்ற அடிப்படையிலும் நிராகரிக்கின்றோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா கூட்டம் தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியைப் பொறுத்தமட்டில் கடந்த மாதம் 18 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற எமது அதியுயர் பீடமான தலைமைக் குழுக் கூட்டத்தில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அரசாங்கத்திற்கு இனிமேலும் கால அவகாசத்தை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் மன்றம் வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுதான் இப்போதும் எமது கட்சியின் நிலைப்பாடாகும்.
ஆனால் கடந்த சனிக்கிழமை வுவனியாவில் நிகழ்ந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோருக்கான கூட்டத்தில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர் ஒரு சமரச முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
இந்த முடிவு சம்பந்தமான தீர்மானத்தை நோக்குகின்ற போது அந்தத் தீர்மானம் அரசாங்கத்தின் போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான கால அவகாச கோரிக்கையை அனுசரிக்கும் விதத்திலேயே அமைந்துள்ளது என்பதை மிக மன வருத்தத்துடன் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.
போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் அரசாங்கம் நேர்மையாக செயற்படவில்லை. அந்த விசாரணையை இழுத்தடித்து மழுங்கடிக்கச் செய்யும் நோக்கத்துடன் அதனுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் நகர்வும் அமைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் தான் அரசாங்கத்தின் போர்க்குற்ற விசாரணைக்கு கால அவகாசம் கோருகின்ற நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றம் நிராகரிக்க வேண்டும் என்பதை தமிழர் தரப்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொதுஅமைப்புகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர். எமது கட்சி தனது நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளது. இந்த விடயத்தில் எந்த ஒரு சமரசத்திற்கும் இடமில்லை எனத் தெரிவித்தார்.