Ad Widget

தமிழர் பிரதேசத்தில் விகாரை நிர்மாணம்; உண்ணாவிரதமிருந்தவர்கள் கைது

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை (05) அடையாள உண்ணாவிரதமிருந்த காணி உரிமையாளர்கள் மூவரையும் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, விகாரைக்கு முன்பாக முன்னெடுக்கப்படவிருந்து கண்டனப் போராட்டமும் கைவிடப்பட்டு, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி பெறாமல் அவற்றை முன்னெடுத்ததாகக் கூறியே மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் கூறினர்.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம மக்கள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் செய்வதுடன், காணி உரிமையாளர்களான யோகராசா ஜூட் நிமலன், திருஞானசம்பந்தர் மணிவண்ணதாஸ், எஸ்.சிவலோகேஸ்வரன் ஆகியோர் அடையாள உண்ணாவிரதத்திலும் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தனர்.

அதற்கிணங்க மூன்று காணி உரிமையாளர்களும் காலை 7 மணிக்கு விகாரை அமைக்கப்படும் இடத்துக்கு முன்பாக வந்து அமர்ந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.

முல்லைத்தீவு கொக்கிளாய் வைத்தியசாலை காணியின் ஒரு பகுதியையும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் பாதை ஒன்றையும் இணைத்து பிக்கு ஒருவரால் இராணுவத்தினரின் துணையுடன் இந்த விகாரை அமைக்கப்படுகின்றது.

Related Posts