Ad Widget

தமிழர் இலட்சியத்தை வெல்ல வாக்குகளை ஆயுதமாக்குங்கள்! – திருமலையில் சம்பந்தன்

“தமிழரின் இலட்சியத்தை விரைவில் அடைந்துகொள்ள எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்கவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று திருகோணமலை சிவன் கோயிலடி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும்போதே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழரின் ஆயுதப் போராட்டம் மௌனித்த நிலையில் தற்போது ஜனநாயகப் போராட்டம் தொடர்ந்தவாறு உள்ளது. தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அனைத்து உரிமைகளுடனும் எம்மை நாமே ஆளும் நிலை வரும்வரைக்கும் இந்தப் போராட்டம் தொடரும்.

எனவே, எமது இலட்சியத்தை அடைந்துகொள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குகளை ‘வீடு’ சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தவறாது அளிக்கவேண்டும்.

அத்துடன் தாம் விரும்பும் மூன்று வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களுக்குக் கீழ் புள்ளடி இடவும் வேண்டும். இது தமிழர் ஒவ்வொருவருடைய வரலாற்றுக் கடமையாகும். தமிழரின் ஆயுதப் போராட்டம் மௌனித்தாலும் தற்போது தொடரும் ஜனநாயகப் போராட்டத்தில் ஆயுதம் என்ற ரீதியில் எமது ஜனநாயக உரிமையான – எமக்குத் தற்போது இருக்கும் ஒரேயொரு உரிமையான வாக்குரிமை உள்ளது.

எனவே, எதிர்வரும் ஓகட்ஸ் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் தமது வாக்குகளை ஆயுதமாக்கவேண்டும். அப்போதுதான் எமது இலட்சியத்தை விரைவில் அடைந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமின்றி அதிக ஆசனங்களுடன் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியாக மாறமுடியும். இதனூடாக சர்வதேச அரங்கில் நாம் பலமிக்க சக்தியாகத் திகழமுடியும். அத்துடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் எமக்கான தீர்வைப் பெறவும் முடியும்.

இன்று சர்வதேச சமூகம் எமது பக்கம் திரும்பிப் பார்த்துள்ளது. எனவே, கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” – என்றார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவரும் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான சி.தண்டாயுதபாணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள், கூட்டமைப்பின் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts