Ad Widget

தமிழர்களுக்கான தீர்வை வென்றெடுக்க புதிய பிரதமருடன் பேசுவோம் – சம்பந்தன்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்குவது என்பது இதன் அர்த்தம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் வகையிலும் அரசாங்கம் முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க முன்பு பிரதமராக இருந்தபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளமையினால் அவர் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிந்திருப்பர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வு என்கின்ற விடயம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடாக இலகுவாக முன்னெடுக்க முடியும் என்றும் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டார்.

எனவே பலமான அரசாங்கம் ஒன்று கட்டியெழுப்பப்பட்ட பின்னர் அவருடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தி தீர்வினை காண்போம் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

Related Posts