Ad Widget

தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் பதவிகள் தொடர்பில் பொதுக் குழுவே தீர்மானிக்கும்!!!

தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கவல்லதாகும். பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் செயலாளரும் தோல்வியடைந்த நிலையில் அந்தப் பதவிகளில் மாற்றம் ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன், ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அதுதொடர்பிலேயே தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

2020 பொதுத்தேர்தல்
தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றி.

தமிழ் மக்கள் வரலாற்றில் தமிழின விடுதலைப் போராட்டத்தினாலும், போர்களினாலும், இனக் கலவரங்களினாலும் தொடர்ச்சியான இன அழிவுகளையும் சமூக பொருளாதார இழப்புக்களையும் அவலங்களையும் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர். இவை தொடர்கின்றன. இவற்றிற்கு இன்னுமே ஒரு தீர்வு ஏற்படவில்லை.

இப்பொழுது நடைபெற்று முடிந்த 2020 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல வகையான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆறுதலான ஒரு ஜனநாயக வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதேவேளை, தேர்தல் நடைமுறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் கூட்டமைப்பு பொறுப்பேற்கின்றது. இவை பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமை விரைவில் கூடி ஆராயவுள்ளது.

2020 – 08 – 05 ஆம் திகதி பொதுத் தேர்தலில் கோரோனா வைரஸ் நோய் தொற்றுச் சூழலிலும், பெருமளவிலான அரசியற் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டும், வேறுபட்ட தேர்தல் அறிக்கைகளை முன்வைத்த பொழுதிலும் வர்த்தக ரீதியிலான பல சலுகைகளையும், வேலை வாய்ப்புக்களையும் முன்வைத்த பொழுதும் எம் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையையும் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்துக் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதற்காக எம் தமிழ்த் தேச மக்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ் மக்களின் விடுதலைக்கும், தமிழ்த் தேச விடுதலைக்கும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்மை முழுமையாக அர்ப்பணித்து செயல்படுவார்கள் எனவும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு தமிழரசுக் கட்சியின் உயர்பீடமும் (அரசியற் குழுவும்) அடுத்து மத்திய செயற்குழுவும் கூட்டப்பட்டு, தேர்தல் காலத்திலும் தேர்தல் காலத்திற்கு அண்மித்த காலப்பகுதியிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உறுப்பினர்கள் நடவடிக்கை தொடர்பில் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி நடவடிக்கைக்குழு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அடைந்த வெற்றி, ஏற்பட்ட இழப்புத் தொடர்பில் கூட்டமைப்பு உயர்பீடம் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் தொடர்பில் இன்று (08.08.2020) கேள்வி எழாமலே வெளியிடப்பட்ட தன்னிச்சையான கூட்டுப் பொறுப்பற்ற பத்திரிகை செய்திகள் மீண்டும் கட்சிகளுக்குள்ளும், மக்களிடத்திலும் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

மிக விரைவில், உரிய வேளையில் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில்; தமிழரசுக் கட்சி உயர்மட்டக் குழுவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவும் தனித் தனியே ஆராய்ந்து கூட்டாக முடிவை அறிவிக்கவுள்ளன.

தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கவல்லதாகும். பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மாவை. சோ.சேனாதிராசா
தலைவர்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
துணைத் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Related Posts