Ad Widget

தமிழக மீனவர்கள் 54 பேர் விடுவிப்பு

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை அரசாங்கம் விடுத்த பணிப்புரையை அடுத்தே அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம்- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற உள்ள நிலையிலேயே 54 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்கள் கடந்த 21ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து 33 மீனவர்களும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.

அவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை சிறையில் அடைக்க ஊர்காவல்த்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெறும் நிலையில் தமிழக மீனவர்களை கைது செய்வது எப்படி சரியாகும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையிலேயே தமிழக மீனவர்கள் 54பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts