இலங்கை கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் வருவதைத் தடுப்பதற்கு எமது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கடல்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் தலைவர் சு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.
கடற்தொழிலாளர் சங்கத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தமிழக மீனவரின் இழுவைப்படகுகளால் எமது நாட்டு கடல் தொழிலாளர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். புதிய அரசாங்கதின் ஆட்சியில் எமக்கு நல்ல தீர்வு கிடைக்க்கும் என நம்பினோம். நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை’ என்றார்.
‘எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை தடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீன்பிடி அமைச்சர் துலிப் வெத ஆராய்ச்சி, யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், கடற்றொழில் நீரியல்துறை பிரதிப் பணிப்பாளர் எஸ்.ரமேஸ்கண்ணன் ஆகியோரிடம் கடந்த 13ஆம் திகதி ஒரு மகஜரை கையளித்தோம்.
இதுவரை எமக்கு பதில் கிடைக்கவில்லை, விரைவில் இதற்கு முடிவு எடுக்கப்பட வேண்டும். பருத்தித்துறை கடலில் இந்திய இழுவைப்படகினால் சேதமாக்கப்பட்ட வலைகளுக்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. இந்திய இலங்கை மீனவர்கள் அடுத்தமாதம் 6ஆம் திகதி கொழும்பில் சந்தித்து கலந்துரையாட இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கான அழைப்பு எமக்கு கிடைக்கவில்லை’ என்றார்.