Ad Widget

தமது உரிமைகளை அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்துவதையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்

இந்த வருடத்துக்குள் அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

இது தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும் என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து சமயத் தலைவர்களின் தேசிய மாநாடு என்று தொனிப்பொருளில் தேசிய சமாதானப் பேரவையின் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

கொண்டுவரப்படும் யாப்பு புதிய அரசியலமைப்பாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு திருத்தமாக இருக்கலாம் என்று தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் பெரும்பாண்மை இன மக்களின் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே தான் தமது உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாகவே உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

13ஆவது திருத்தம் அதிகாரப்பகிர்வுக்கு போதாதா என சிலர் கேட்கின்றனர். இது போதுமானதாக இல்லை என்பதனாலேயே கடந்த 30 வருடமாக யுத்தம் இடம்பெற்றது. இந்நிலையில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் போதாதா எனக் கேட்கின்றமை வேடிக்கையாக உள்ளது என்றார்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டேன். எமது இந்த திட்டத்திற்கு பிரபாகரன் அதனை விரும்பவில்லை. நான் முன்னெடுத்த இந்த அரசியல் திட்டம் தொடர்பில 7 மாத காலப்பகுதிக்குள் 33 சுற்று பேச்சுவார்தைகளே நடத்தியிருந்தேன். அன்று இதனை எதிர்த்தவர்கள் இன்று அரசாங்கத்துடன் எம்முடன் இணைந்துள்ளனர். எனவே சகல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்ததொரு காலம் ஏற்பட்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன் என்று தெரிவித்தார்.

காணாமல் போனோர் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில் யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்துள்ளது என்பதை தெளிவாகக் கூறவேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படாவிட்டார் காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர்ந்தும் கண்ணீர் வடித்தவாறு தேடிக் கொண்டேயிருப்பர்.

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகமொன்றை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை விரைவில் அமைத்து காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு தெளிவான நிலைப்பாடொன்று அறிவிக்கப்பட வேண்டும்.

இந்த அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தொடர்புபட்ட இராணுவத்தினரை யுத்த குற்ற நீதிமன்றத்துக்கு இழுக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அப்படியான எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை. இப்படிச் செய்யுமாறு எந்தவொரு சர்வதேசமும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடிய வகையிலான அரசியலமைப்பு மாற்றமொன்று இந்த வருடத்துக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அது புதிய அரசியலமைப்பாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு திருத்தமாகவும் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் கலந்துகொண்டு மாவட்ட ரீதியில் நல்லிணக்கம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர்.

இந்த நிகழ்வில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts