தந்தை செல்வநாயகத்தின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தந்தை செல்வநாயகத்தின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து தந்தை செல்வா அறங்காவல் குழுவின் தலைவர் சு.ஜெபநேசன் தலைமையில் தந்தை செல்வநாயகத்தின் நினைவு பேருரை நிகழ்வு நடைபெற்றது.
அதில், அரசியல் அமைப்பின் நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண, அதிகாரப் பகிர்விற்கான கோரிக்கை எனும் தொனிப் பொருளில் நினைவு பேருரை ஆற்றினார்.
குறித்த நிகழ்வில், தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், சரவணபவன், கிழக்கு மாகாண அமைச்சர் துரைரட்ணம் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் எனப்பலலும் கலந்துகொண்டனர்.
