Ad Widget

தடுப்புக் காவலில் உள்ள இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட வேண்டும்

மூன்று தகாப்தமாக இடம்பெற்ற பயங்கரவாதத்தை தோற்கடித்து 07 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூறுவது சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இராணுவத்தினரை கைது செய்வதற்காக அரசாங்கம் பயன்படுத்தும் போலியான மற்றும் கீழ்த்தரமான காரணங்கள் தொடர்பாக நீதிபதிகள் திறந்த நீதிமன்றங்களில் ஆச்சர்யம் வெளியிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற போர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,.

அமெரிக்க உளவு அமைப்பான FBI, உலகின் மிக பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் போர் புரிந்து எமது இராணுவம் கீர்த்தி மிக்க வெற்றியொன்றைப் பெற்றுக் கொண்டது.

இந்த வெற்றி தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றி அல்ல. விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே யுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை யுத்த வெற்றியின் பின்னர், விடுதலைப் புலிகளை பழிவாங்கும் மனோபாவத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை.

இராணுவத்தினரிடம் சரணடைந்த 11 ஆயிரத்திற்கும் அதிகமான விடுதலைப் புலி உறுப்பினர்களை புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளோம்.

எஞ்சிய சுமார் 300 பேர் வரையான முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்களை வழக்குத் தாக்கல் செய்யும் நோக்கில் தடுத்து வைத்திருந்தோம். ஆனால் இந்த அரசாங்கம் அவர்களை விடுதலை செய்து கொண்டிருக்கின்றது.

அதே நேரம் இந்த அரசாங்கம் இராணுவத்தினரை பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளது.

யுத்தத்தில் வெற்றி பெற்றமை தவறான ஒரு விடயம் போன்றதொரு கருத்தை இராணுவத்தினர் மத்தியில் பரப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றியை முழு உலகும் வியந்து பாராட்டியது. அதனைக் கௌரவிக்கும் வகையிலேயே நாங்கள் வருடாந்தம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தி வந்தோம்.

ஆனால் இந்த அரசாங்கம் நல்லிணக்கத்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடும் என்று கூறி கலாசார நிகழ்வொன்றின் ஊடாக யுத்த வெற்றியை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.

நாங்கள் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் செய்த காலத்தில் மேற்கத்தேய நாடுகள் அவர்களைக் காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

இன்று அவர்கள் வகுத்துக் கொடுக்கும் பாதையில் இந்த அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

அதன் காரணமாகவே வடக்கில் சமஷ்டியை வலியுறுத்தும் அரசியல்வாதிகள் இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து இராணுவத்தினரைப் பரிகசிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தினரை வாபஸ் பெறும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் இராணுவத்தினரை யுத்தக் குற்றவாளிகளாக்கும் வகையிலான செயற்பாடுகளிலும் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இவற்றை உடனடியாக நிறுத்தி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இராணுவத்தினரை விடுதலை செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிட வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Posts