வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மீது தமிழீழ விடுதலை இயக்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை போக்குவரத்து துறையின் நலன் கருதி நிறுத்தியோ அல்லது தாமதப்படுத்தியோ ஒத்துழைப்பு வழங்குமாறு வட மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் தமிழீழ விடுதலை இயக்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கடிதத்தினை கட்சியின் தலைமையிடம் ஒப்படைக்கும் விதமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கட்சிப் பிரமுகரொருவரிடம் குறித்த சங்கம் ஒப்படைத்துள்ளது.
இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘வடமகாணத்தில் அண்மைக்காலமாக அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதனை அவதானித்தவர்கள் என்ற வகையில் எமது சங்கமானது தங்களிடம் எமது கோரிக்கைகள் அடங்கிய நியாயபூர்வமான சில விடயங்களை முன்வைக்க விளைகின்றது.
வட.மாகாண போக்குவரத்து அமைச்சின் ஊடாக வட மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்ததுடன் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் புதிய பேரூந்து நிலையத்தினை 195 மில்லியன் ரூபா பண செலவில் அமைத்து பல மாதங்களாக செயற்படாது உள்ள நிலையில் தற்போது வட மாகாண போக்குவரத்து கௌரவ அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அதனை திறப்பதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறான திட்டங்கள் கைகூடி வரும் நிலையில் தங்களது கட்சி கௌரவ அமைச்சர் பா. டெனிஸ்வரனை நீக்குமாறு கோரி வட மகாhண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அறிகின்றோம்.
எமது போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று இலங்கையில் எந்த மாகாணத்திலும் இல்லாதவகையில் போக்குவரத்து துறைக்கு நியதிச்சட்டத்தினை உருவாக்கி 60 இற்கு 40 என்ற நேரசூசி அட்டவணையை அறிமுகம் செய்து அதனை வர்த்தமானியில் பிரசுரித்து சட்டமாகிய பெருமை அமைச்சரையே சார்ந்துள்ளது.
இச்சூழலில் தங்களது கட்சி போக்குவரத்து துறையை சார்ந்தவர்களதும் வட மாகாண போக்குவரத்து துறையினதும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு கௌரவ அமைச்சர் பா. டெனிஸ்வரன் மீது மேற்கொண்டுள்ள நடவடிக்கையை நிறுத்தியோ அல்லது தாமதப்படுத்தியோ மேற்கொள்ளுமாறு எமது சங்கத்தின் சார்பில் தங்கள் கட்சியின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம் என்பதுடன் எமது இக்கோரிக்கையை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.