Ad Widget

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கிலிருந்து பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து விடுதலை செய்து ( Acquitted and Released) மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டில் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

சந்திகாந்தன் உள்பட 5 எதிரிகளும் மன்றில் முன்னிலையாகினர்.

வழக்குத் தொடுனர் சார்பில் மூத்த அரச சட்டவாதி மாதவ தென்னக்கோன், அரச சட்டவாதி செகான் முஸ்தபா ஆகியோர் முன்னிலையாகினர்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையாகும் ஜனாதிபதி சட்டத்தரணி உள்ளிட்ட பலர் முன்னிலையாகினர்.

எதிரிகள் 5 பேருக்கும் எதிரான குற்றப்பத்திரிகையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என்று சட்ட மா அதிபர் சார்பில் மூத்த அரச சட்டவாதி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மன்றுரைத்தார்.

அதனால் பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கும் எதிரான வழக்கின் நிலை தொடர்பான கட்டளையை வழங்குவதற்காக வழக்கை மன்று இன்று வரை ஒத்திவைத்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து விடுதலை செய்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.

பின்னணி

2005ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டிருந்த போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை வழக்கில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் சந்தேகத்தின் இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாய் மதுசிங்க (வினோத்) ஆகியோர் முன்னர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான, சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 2015 ஒக்ரோபர் 11ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கபட்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுக் கொண்டார்

Related Posts