Ad Widget

ஜெனிவா தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது: யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலிமையானது என யாழ் மாவட்ட மக்கள் பேரவை அறிவித்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் தமிழருக்கு சார்பான தீர்மானம் நிறைவேற்றியமைக்காக தாங்கள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானம் எமது இனத்தின் விடிவுக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. நீண்ட காலமாக விடிவிற்காகப் போராடி வீரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் மனங்களில் பால் வார்த்த தீர்மானமாக தமிழக சட்டப் பேரவைத் தீர்மானம் திகழ்வதாகவும் யாழ். குடாநாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக யாழ் குடாநாட்டு மக்களின் சார்பில் யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் ஈழத் தமிழர்கள் சிங்களவர்களால் அடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர்.

இந்த அடிமைத்தனத்தை எதிர்த்து கடந்த முப்பது வருட காலம் அகிம்சை ரீதியாகவும் முப்பது வருட காலம் ஆயுத ரீதியாகவும் நாங்கள் போராடினோம். ஆனால், எமது போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மீண்டும் அடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர். இந்த நிலையில் யாருமே உதவிக்கு இல்லை என்று தவித்துக்கொண்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு சார்பாக தமிழக மாணவர்கள் அலை அலையாக எழுச்சியடைந்து குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் உச்ச நிலையாக தமிழக சட்டப் பேரவை ஈழத் தமிழ் மக்களுக்கு சார்பான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது.

இந்த தீர்மானத்தை சபையில் கொண்டு வந்து சமர்ப்பித்து நிறைவேற்ற முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள். அவரின் இந்தச் செயற்பாடு எங்கள் மனங்களில் தேனாக இனிக்கின்றது. இந்தத் தீர்மானத்தால் ஈழத் தமிழர்கள் இன்று பெருமிதமடைகின்றனர். ஏழு கோடி மக்களின் தாயாக விளங்குகின்ற தமிழக முதல்வர் இன்று ஈழத் தமிழர்களையும் தன் பிள்ளைகள் போல் கருதி எங்களையும் அரவணைத்து நிற்கின்றமை வரலாற்றுத் திருப்பு முனையாக அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். இன்று வரை ஈழத் தமிழ் மக்கள் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தையும் இறந்த தினத்தையும் கொண்டாடுகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் அவர் ஈழத் தமிழ் மக்கள் மீது கொண்ட அளப்பரிய அன்பும் அக்கறையுமே ஆகும். இன்று வரை யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மூன்று எம்.ஜி.ஆர் மறுமலர்ச்சிக் கழகங்கள் இயங்கி வருகின்றன என்றால் அது எம்.ஜி.ஆர் மீது ஈழத் தமிழ் மக்கள் வைத்திருக்கின்ற அன்பிற்கும் மரியாதைக்கும் எடுத்துக்காட்டுக்களாகும்.

அதே எம்.ஜி.ஆரின் வழியில் இன்று எங்கள் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா தடம் பதித்துள்ளமை ஈழத் தமிழ் மக்களாகிய எமது விடுதலைக்கு முதற்படியாக இருக்கின்றது. சிறிலங்கா அரசாங்கம் எங்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யுத்தம் காரணமாக லட்சக்கணக்கான எங்கள் உறவுகள் கொல்லப்பட்டனர். ஏராளமான அப்பாவி மக்கள் காயப்படுத்தப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாக்கப்பட்னர். அந்தப் பெண்களின் நிலை கண்டும் ஈழத் தமிழரின் இன்னல் கண்டும் எமக்கு உதவிக் கரம் நீட்டியுள்ள ஜெயலலிதா அவர்கள் என்றும் எங்கள் மனக் கோயில்களில் பூசிக்கப்படுவார்.

தமிழர்களைக் கொன்றொழித்த சிறிலங்கா அரசுக்கும் அதன் இனவாதப் படைகளுக்கும் எதிராக ஜெனிவாவில் இரண்டு தடவைகள் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் அது வெறும் அடிப்படையற்ற தீர்மானமாகவே அமைந்துள்ளது. அந்த தீர்மானங்கள் தொடர்பாக தமிழ் மக்கள் எதுவித அக்கறையையையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது ஐ.நா சபை தீர்மானத்தை விட ஆயிரம் மடங்கு வலிமையானது என்று யாழ். குடாநாட்டு மக்களாகிய நாம் கருதுகின்றோம். புதன்கிழமை தொடக்கம் இன்று வரை யாழ், குடாநாட்டு மக்கள் தமிழக தீர்மானம் தொடர்பாக கதைப்பதிலேயே தமது பெருமளவு நேரத்தை செலவிடுகின்றனர். அந்தளவிற்கு இந்த தீர்மானம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனால் இந்த தீர்மானம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டுமென்பதே எமது அவா ஆகும். இது செயற்படுத்தப்படும் திறன் வாய்ந்ததாக மாற வேண்டுமென்றும் குடாநாட்டு மக்களாகிய நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு மீண்டுமொரு தடவை நாங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

– தமிழ் மக்கள் பேரவை
– யாழ்.மாவட்டம்

jeyalalithaaaa

Related Posts