Ad Widget

ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை கூட்டமைப்பால் தயார் செய்யப்படுகின்றது – சுமந்திரன்

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவிகரிக்கப்படும் பிரச்சினை தற்போது பூதாகாரமாக மாறியிருந்கின்றது. இது தொடர்பாக சில பொது அமைப்புக்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்தவேண்டும் என கலந்துரையாடியுள்ளோம். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது எமது பிரதான கடமையாக கருதுகின்றோம்.

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எழுத்துமூலான அறிக்கையை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிடும். மார்ச் 3ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு ஆய்வு இடம்பெறும். அதற்கு உதவியாக இன்றைய சூழலை அவர்கள் அறியும் முகமாக தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனும் ஏனைய பங்காளி கட்சிகளுடனும் இணைந்து ஆவணமொன்றை தயார் செய்கின்றோம்.

ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணமும் இரா.சம்பந்தனிடம் உள்ளது. அது நாளை மறுநாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பகிரப்படும். மிக விரைவில் அதற்கு இணக்கம் காணப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடிதமாக இரா.சம்பந்தனின் ஒப்பத்தோடு அனுப்பி வைக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts