Ad Widget

ஜெனிவாவில் சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தும் தமிழர் பிரதிநிதிகள்

ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தை முன்னிறுத்திய உப குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் இலங்கை நிலைமை தொடர்பாக ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தில் இலங்கையிலிருந்து ஜெனிவா சென்றுள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் இந்த உபகுழுக் கூட்டங்களில் அரசியல்வாதிகள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், மனித உரிமை காப்பாளர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது யோசனைகளை முன்வைத்து வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச அரச சார்ப்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் போன்ற தரப்பினர் உப நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இன்றைய தினம் ஜெனிவாவில் நடைபெற்ற உபகுழுக் கூட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த உபகுழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான முறையில் நீதி கிடைக்கவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தொடர்ச்சியாக இலங்கை விவகாரத்தை முன்னிறுத்தி பல்வேறு உபகுழுக்கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறவேண்டும் என்பதனை வலியுறுத்திவருகின்றனர்.

Related Posts