Ad Widget

ஜனாதிபதி வீட்டின் முன்பாக போராட்டம் – கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரிப்பு!

நுகேகொட – மிரிஹான பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பேருந்து ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது னாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான பெங்கிரிவத்த இல்ல வீதியை சுற்றிவளைத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் காணப்படும் நெருக்கடிகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஜனாதிபதியின் வீட்டினை முற்றுகையிட்ட மக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். இதே வேளை ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இணையச்சேவையும் முடக்கப்பட்டது எனினும் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சில மணித்தியாலங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியது.போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts