யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டுத் திடலில் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் வைபவம் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் தமிழ்த்தின பரிசளிப்பு விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே , வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் உட்பட பலரும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கபட்டடிருந்தது. இருப்பினும் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந் நிகழ்வில் பங்கேற்பதில்லை என்ற நிலைப்பாட்டினை எடுத்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்திற்கு அரசாங்கம் தீர்வொன்றை காணவில்லை என்பதனாலும் ஜனாதிபதியை இவ்விடயம் தொடர்பில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியபோதிலும் அதற்கான நேரம் ஒதுக்கப்படாமையை கண்டித்துமே கூட்டமைப்பினர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிகின்றது.
ஆனாலும் இவ்வியடம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவிக்கையில்,
குறித்த விழா ஏற்பாட்டார்கள் என்னை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தபோது அத்தினத்தில் எனக்கு வேறு கருமங்கள் இருப்பதால் பங்கேற்பதில் சிரமமான நிலையொன்று உள்ளது. ஏனினும் அந்நிகழ்வு சிறப்புற எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். மேலும் அந்நிகழ்வுக்கான வாழ்த்துச் செய்தியொன்றையும் அனுப்பியுள்ளேன். நான் அந்நிகழ்வில் பங்கேற்காத விடயத்தினை ஏற்பாட்டாளர்களுக்கு முன்கூட்டியே அறிவித்து விட்டேன் என்றார்.
எனினும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்,மற்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாம் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக விடுத்த கோரிக்கை குறித்து ஜனாதிபதி பாராமுகமாக இருக்கையில் ஜனாதிபதி பங்கேற்கும் இவ்வாறான நிகழ்வில் பங்கேற்பது பொருத்தமற்றது என்ற தீர்மானத்தினை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
மேலும் வழக்குகளை இடமாற்றக்கோரும் சாதாரணதொரு விடயத்திலே சட்டமா அதிபர் திணைக்களத்தினை மையப்படுத்தி ஜனாதிபதி இத்தகைய இழுத்தடிப்புக்களைச் செய்வது பொருத்தமற்றதாகும். அத்தகையவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எத்தனை தூரம் சாதகமாக சிந்திப்பார் என்றும் இவர்கள் ஆதங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.