ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோர் நியூயோர்க் நகரில் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69ஆவது அமர்வின் ஓரமாக இடம்பெற்ற இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது இருதரப்புச் சம்பந்தமான பல விடயங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
பொருளாதார, அபிவிருத்தி துறைகளில் இலங்கையின் அண்மைய விருத்திநிலை தொடர்பாகவும், இலங்கையின் நல்லிணக்கப் பணிகள் தொடர்பாகவும் பிரதமருக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ விளக்கினார்.
மேலும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிறப்பாக செயற்படுவதாகவும் இலங்கையின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 7.8 சதவீதமாக இருப்பது சிறப்பான ஒரு விடயம் எனவும் டோனி அபோட் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் மனிதக் கள்ளக்கடத்தலை எதிர்கொள்வதற்கு இலங்கை வழங்கியுள்ள உதவிக்கு தாம் மிகவும் நன்றி தெரிவிப்பதாகவும் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.