Ad Widget

ஜனாதிபதி அழைப்புக்கு கூட்டமைப்பு நிபந்தனை

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா ஜனாதிபதிகள் தலைமையிலான அரசாங்கங்களும் (ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உட்பட)இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் அமைத்திருந்த தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் 13 ஆம் திருத்தத்துக்கும் அப்பால்சென்று முன்னேறிய அரசியல் தீர்வுத் திட்டத்தையே பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட நிறைவுரையை கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ‘வெளிநாட்டிடம் தீர்வு தேடாமல் உள்நாட்டிலேயே தீர்வொன்றை’ எட்ட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா- அதுபற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியபோதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

‘ஜனாதிபதியின் அழைப்பை கவனமாக பரிசீலிப்போம். உள்ளூரிலேயே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாகவும் விசுவாசமாகவும் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கிறோம்’ என்றார்

13 ஆம் திருத்தத்திலிருந்து முன்னேறிய அரசியல் தீர்வுத்திட்டத்தையே கடந்த கால தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் பரிந்துரை செய்திருந்தன.

ஓராண்டுக்கும் மேலதிகமாக அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தும் அதன்போது தாம் முன்வைத்திருந்த தீர்வு யோசனைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து உறுதியளிக்கப்பட்டவாறு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பின்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு ஜனவரி 17, 18, 19 ஆம் திகதிகளில் இடம்பெற இருந்த பேச்சுவார்த்தைகளுக்கு அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சமூகமளிக்காதபடியாலேயே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முறிந்துபோனதாகவும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

பேச்சுவார்த்தை முறிவடைந்தமைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அதில் இடம்பெறுமாறு அரசாங்கம் தமக்கு விடுத்த அழைப்பை ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார்.

’13 ஆம் திருத்தத்தை முற்றாக இல்லாது செய்வதற்கான அல்லது அதிகாரங்களைக் குறைப்பதற்கான’ தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நியாயமான அரசியல்தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தால், ‘ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்’ என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்

Related Posts