அரசியல் கைதிகள் உருவாக கடந்த கால அரசியல் தலைமைகளே காரணம். அரசியல் தலைமைகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அரசியல் கைதிகள் உருவாகி இருக்க மாட்டார்கள் என ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிகன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட சிவராஜா ஜெனிகன், கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கூறி புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
மாணவனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சிவராஜா ஜெனிகன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு ஜனவரி 8ம் திகதி நாட்டிற்கு மாற்றம் வந்தது.இந்த ஆண்டு 8ம் திகதி என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த நாட்டிலே நான் பிறக்க முதல் இருந்தே, பிரச்சனை இருக்கின்றது.அதனாலையே நாங்கள் அரசியல் கைதிகளாக இருக்கின்றோம். அதற்கு காரணம் அரசியல் தலைமைகள் தான்.
அவர்கள் அந்த நேரம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் நாம் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டோம்.அவர்கள் செய்த தவறே நாம் இவ்வாறு இருக்க காரணம்.என்னை விடுவித்தது போல ஏனையவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்துடன் இந்த ஜனாதிபதி காலத்தில் தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.அரசியல் கைதிகளின் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்தார்.